Friday, July 20, 2007

என்னை சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்கப்பா

புகைப்பட போட்டின்னு நம்ம நட்சத்திர பதிவாளர் முத்துலெட்சுமி பதிவைப் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன். உடனே கோதவில் இறங்க எங்கே நேரம். அதனால சமீபத்தில் எடுத்த படங்களை உங்களுக்காக இங்கே. 50 பேரு தான் பங்கேற்க முடியுமாமே.... அதனால என்ன... கலந்து கொண்டேன்னு பேர் பண்ணிக்கலாமின்னு...... ஹீ ஹீ ஹீ.




அண்ணாத்தை வீட்டின் பின்புறம் உள்ள காட்டில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். கிளிக்கிட்டேன். உதறல் கொஞ்சம் இருந்தாலும், அவரை இவ்வளவு பக்கத்தில் பார்த்த பெருமிதத்திலும் தைரியமா பக்கத்தில் போய் எடுத்த படம். கொஞ்மும் டச்சப் செய்யாமல் எடுத்தது போலவே தந்துள்ளேன். Camera -- Sony DSC F717





ஒரு மழை நாள் வீட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தேன். மரங்கள் அசைவதும், இலைகள் பட படப்பதும் கவிதைத்துவமாக் இருந்தது. வீட்டின் முன்னுள்ள செடியில் பூத்திருந்த லில்லி மலர்கள் தேனில் தோய்த்தெடுத்த பலா பழத்தை நினைவு படுத்தின. கிடைத்த தாளில் என் கிறுக்கல்களை கிறுக்கி விட்டு, அக்கணத்தை கிளிக்கினேன். மழையாக இருந்ததால், Light effect சரியாக இல்லை. Level increase மட்டும் செய்ய வேண்டியதாகி போச்சி. வேறொரு மாற்றமும் செய்யவில்லை. Camera -- Sony DSC F717.

இன்னும் படம் வேணுமா, இதுவே போதுமா?

Thursday, July 19, 2007

பெண்ணின் நிலை

என் நண்பனிடமிருந்து ஈமெயில். 82 வயதான மூதாட்டியார் தில்லி மாநகரில் கற்பழிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, 2 நாளில் இறந்து போனார். இது 2 வருடங்களுக்கு முந்தைய செய்தி. இது கேட்டதும் என் கண்களில் நீர். மனதில் குடைச்சல். நாம் மனிதர்கள் தானா? ஆறறிவு படைத்தவர்கள் தானா? வேலை செய்ய மனமில்லாமல், வீட்டுக்குள் ஓடி ஒளிந்தேன். என்ன ஆச்சி நம்ம மக்களுக்கு? ஏனிந்த புத்தி பேதலிப்பு? மூதாட்டியாரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும்? கேள்வி மேல் கேள்வி. மன உளச்சல்.

என் கண்முன் பற்பல காட்சிகள் வந்து போகின்றன. பல வருடங்களுக்கு முன் நடந்த கதையிது. ஆந்திராவில் நடந்தது இது. அங்கு கொத்தடிமை என்பது சர்வ சாதரணம். பல கிராமங்களில் பெண்களின் நிலை ஆண்களால் (தகப்பன் - மகள், தனையன் - தங்கை என்ற பாகுபாடின்றி) எச்சூழ்நிலையில், எவ்வாறெல்லாம் சூறாடப்படுகிறது என்பது பற்றியும், அதை ஒரு பொருட்டாக கருதாத அம்மக்கள் பற்றியும் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. நான் பணி செய்த இடத்தில், ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, எங்களை குழுக்களாக பிரித்து, பெண்களிடன் பேசி, அவர்களின் மன புழுக்கத்தை வெளிக் கொணரவும், தற்காப்பு முறைகள் பற்றி விளக்கவும் அனுப்பினார்கள். அவர்கள் சொன்னவையாவும் பதிவில் இடமுடியாதவை. ஆனால் 82 வயது பாட்டியின் செய்தி, இந்த கிராமத்து நிலையை என் கண்முன் கொண்டு வந்ததை மறுக்க முடியாது. அப்போது இருந்த என் உள்ள வெளிப்பாடு தான் இந்த கிறுக்கல்கள்.

சமீபத்தில் என் நண்பன் 2 வயது பச்சிளம் குழந்தையை தகப்பனே கற்பழித்த கொடுமையை கூறினான். மற்றுமொரு நண்பனிடம் இது குறித்து பேசிக்கொண்டிருக்கையில், நான் அன்று (பல வருடங்களுக்கு முன்) எழுதிய மனக் குமுறலை பதிவில் எழுதும் படி பல முறை வேண்டிக் கொண்டான். அந்நண்பன் தூண்டுதலால், இன்று அவனுக்காக இப்பதிவு…… முடிந்தால் வாசிக்கவும்.

=============================================

பெண்ணின் நிலை

அழுத்திப் பிடித்து கண்ணத்தில்
முத்தம் தருவார் அடுத்த வீட்டு அண்ணா

கழுத்து துவங்கி புட்டம் வரைத் தடவி
தன் அன்பை தெரிவிப்பார் சித்தப்பா

எப்போதும் மடியிருத்தி
அணைத்துக் கொள்வார் மாமா

அடி பம்பு தண்ணியில் குளிக்கும் சாக்கில்
இடுப்புத் துணி நழுவ விடுவார் தோழியின் தந்தை

பேச்சின் நடுவில் உதட்டின் குவியலை குறிவைப்பார்
புதிதாய் திருமணமான பக்கத்து வீட்டு அக்காளின் கணவன்

முலை தடவுவதில் முன்னுரிமை
கொடுப்பார் பக்கத்து வீட்டு தாத்தா

சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து அக்குளுடன்
முலையழுத்தி இறக்கி விடுவார் ரிக்ஷாக்காரர்

இருட்டின் வெளிச்சத்தில் சன்னலோரம்
தூக்கி நிலா காண்பிப்பார் டியூசன் வாத்தியார்

இயலாத நிலையிலும்
யோனி கிழிக்க முற்படுவார் மருத்துவர்

நிலைப் படியில் பயணிப்பினும்
புட்டம் பிடிப்பர் இடி மன்னர்கள்

வேலையின் நடுவில் மார் நடுவை
அளவெடுப்பார் மானேஜர்

இது இன்றும் என்றும் தொடர் கதை
இந்த மண்ணில் பிறந்த பெண்ணின் நிலை

ஆம்! இம்மண்ணில் பெண்ணாய் பிறக்க
மாதவம் செய்ய வேண்டும்!!!!


-- காட்டாறு

Thursday, July 05, 2007

வாழ்க்கை இரசிப்பதற்கே

இன்று நண்பன் அனுப்பிய மடலைப் பார்த்ததும் ரசித்து சிரித்தேன். மக்களே, இது இரசிக்க மட்டுமே. யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். சிந்திக்க வேண்டாம். சிரித்துவிட்டு மறந்து விடுங்கள்.

இப்போ அந்த forward-லிருந்து....

Before Marriage:
============
He : Yes. At last. It was so hard to wait.

She : Do you want me to leave?

He : NO! Don't even think about it.

She : Do you love me?

He : Of course!

She : Have you ever cheated on me?

He : NO! Why you even asking?

She : Will you kiss me?

He : Yes!

She : Will you hit me?

He : No way! I'm not such kind of person!

She : Can I trust you?



Now After Marriage.........

You can read it from bottom to the top !!!!

சேதுக்கரசியாரின் தயவால்:
இங்கே பாருங்க அம்மணி :-)

Tuesday, July 03, 2007

காதலித்துப் பார்

காதலித்துப் பார்
இயற்கை அவளாவாள்; நீ அடிமையாவாய்

காதலித்துப் பார்
கண்ணுக்குள் நிழழாடுவாள்; நெஞ்சில் நடை பயிலுவாள்

காதலித்துப் பார்
அவள் கண்ணசைவில் பிரளயம் நடக்கும்; மீண்டும் பிறப்பாய்

காதலித்துப் பார்
சருகும் உயிர் பெறும்; அசையும் எப்பொருளும் அவளாவாள்

காதலித்துப் பார்
அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வரும்; இரண்டும் அவளிடம் மட்டும் வரும்

காதலித்துப் பார்
மொத்த அழகும் அவளாவாள்; இயற்கையும் சிறுமையாகும்

காதலித்துப் பார்
வயிற்றில் மின்னலடிக்கும்; நா வரளும்

காதலித்துப் பார்
அவளாசை உன்னாசையாகும்; உன் தேவை மறந்து போகும்

காதலித்துப் பார்
சொல்லெல்லாம் கவிதையாம்; சொல்லே அவள் வாய் மொழி தாம்

காதலித்துப் பார்
பேனா கிறுகிறுக்கும்; நீயும் தான்

காதலித்துப் பார்
உலகே உயர்வானதாகும்; எல்லாரும் நல்லவராவர்

காதலித்துப் பார்
நெஞ்சின் வலியும் அழகாகும்; காயமே மருந்தாகும்

காதலித்துப் பார்
எனக்குள்ள வேதனை உனக்கு புரியும்; நான் பெற்ற இன்பம் உனக்கு தெரியும்

காதலித்துப் பார்
மோட்சமடைவாய்; இறப்பாய்; மீண்டும் பிறப்பாய்
-- காட்டாறு

Friday, June 22, 2007

வந்ததும் பேசுவேன் என்றாளே!

வெகு நேரமாகியும் என்னவளைக் காணவில்லை
இன்னும் வரவில்லையோ? வந்தும் பேசவில்லையோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

வேலை அதிகமோ? வேனிற் அதிகமோ?
தலை வலியோ? "தலை"யின் வலியோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னை மறந்தாளோ? எங்கும் விழுந்தாளோ?
என்னை நீங்கினாளோ? என்னுடன் நீங்கினாளோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னுயிர் என்றாளே; என்னில் பாதி என்றாளே
பாதி தவிக்கிறதே; அலைப்பாய்கிறதே; அறிவாளோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

நான் உன் கண்மணி என்றாளே; கண்ணின் வலி அறிவாளோ?
அறிந்தும் அமைதி காப்பாளோ? என்ன ஆனது அவளுக்கு?
வந்ததும் பேசுவேன் என்றாளே

அவள் மனம் வேதனைப் படுகிறதோ? ஏன் என் மனம் வலிக்கிறது?
நான் வீணாய் கவலைப் படுகிறேனோ?கற்பனன செய்கிறேனோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னைப் பைத்தியமாக்குவதில் சுகமோ?
அறியாமல் செய்கிறாளா? அறிந்து தான் செய்கிறாளா?
வந்ததும் பேசுவேன் என்றாளே

புலம்புகிறேனோ? இது தான் காதலோ?
அவள் பேசியதும் என் புலம்பல் நின்று விடுமோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

பேசியதும் கோபம் வருமோ? சந்தோஷம் வருமோ?
கண்ணில் நீர் வழியுமோ? ஆனந்தத்தில் அமைதியாவேனோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
-- காட்டாறு

Friday, June 15, 2007

டீக்கடைக்காரன்

காபிக் கடை
நடுநிசி
நிர்ச்சலனமான இரவு
கேலியும் கிண்டலுமாய்
மாணவர்க் கும்பல்

சர் சர் என்று
இரு கைகளுக்கிடையில்
மாறி மாறி ஓடும் டீ

தன்னிலை மறந்தவனாய்
கடமையே கர்மமாய்
காவியமாய்
அக்கணத்தில்
தெய்வமானான் அவன்!


– காட்டாறு

Tuesday, June 05, 2007

வலைப் பதிவு நண்பர்களுக்கு சொல்ல மறந்த கதை

பழையன கழிதலும் பத்தி வேலை செய்யுமிடத்தில் பேசப் போய்..... ஓடோடி.... ஓடோடி... ஓடோடி..... வந்திட்டேன் பதிவெழுத. என்னடா சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறாளே.... இவளுக்கு கழண்டுகிச்சான்னு சுத்தியும் ஆணியும் எடுத்துக் கொண்டு, ஆவலுடன் கையோங்கி வரும் என் அருமை நண்பர்களே... சற்றே பொறுங்கள். உங்கள் அன்பு கண்ணில் நீர் வர வைக்கிறது. (கை ஓங்கியவுடன் அழும் குழந்தைக்கு அடி கிடைக்காதுன்னு எனக்கு தெரியாதா என்ன? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......).

நான் சொல்ல வந்தது என்னன்னா... வேலை பார்க்கும் இடத்தில் சொன்னாங்க.... தரவுகள்(data) பத்தியும், தரவு வகைகளைப் பத்தியும் தளத்தகைத் திட்டம் (strategic plan) தீட்ட சொன்னார்கள். பழைய ஆவணங்களைத் தூக்கி பரணுல எறிய சொல்லிட்டாங்க. ஆவணங்கள் படைக்கும் போது, அது வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில், மறந்து விடுவார்கள் என்று சொன்னதும்..... எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்................ வலைப் பதிவில எழுதுறதை கொஞ்ச நாள் விட்டுப்போட்டோமே..... மறுமொழி கூட எழுத நேரமில்லைன்னு இருந்து போட்டோமே............ மனுச மக்கள நெனைக்காம போய்ட்டோமே..... (என்னவொரு பாசமிருந்தா வேலை நேரத்தில கூட உங்க நெனைப்பு வந்திருக்குமின்னு பாத்துக்கோங்க!)................. கொஞ்ச நாள் பேசலைன்னா (எழுதலைன்னா), எப்படி தவித்திருப்பீங்கன்னு பொய் சொல்லாம..... நம்மள மறந்து போகாமலிருக்க (ஹி ஹி ஹி), நம்ம பாசக்கார குடும்பம் வந்து கும்மியடிக்க ஒரு பதிவை ஒன்ன எழுதிப் போட்டுறலாமின்னு ஓடி வந்ததுல....


டி


டி


டி
.
.
.
.


ந்

து

..... அட..... இருங்கப்பா.......... மூச்சி வாங்குதப்பா..... இப்பிடி மூச்சி வாங்க அதிரடியாக ஓடி வந்து சொல்ல வந்த விஷயத்த மறந்து போனதுனால..... திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு ஓடிப் போய்.... ஞாபகம் வருதான்னு இல்லாத, இருக்குற மூளையத் திருகிப் பார்த்தா.... சும்மா ஒரு மொக்கைப் பதிவுப் போடத்தான் இந்த அவசர ஓட்டமின்னு தெரிஞ்சதும்..... அனாவசியமா ஓடி உடற்பயிற்சி செய்தோமேன்னு..... என்னையே நொந்துட்டு, உங்க கிட்டையும் வசவுகள வாங்கிட்டு..... பம்மிப் போய் உட்கார்ந்திருக்கும் அப்பாவியான நான்!

Thursday, May 10, 2007

அத்தையின் மருமகன்


இரண்டு வருட இடைவெளியில் சந்திப்பு
அருமை மருமகன் எனைக் காண வருகிறான்
உள்ளம் உவகையாய் அவனின் வருகை காண
ஞாபகம் இருக்குமா இரு வயதில் களித்த அத்தையை?

உள்ளும் புறமும் தவிக்க
விமான நிலையம் தேய
இங்கும் அங்குமாய் நடை
கால்களும் பாரமாய்

ஆலாய் பறக்கும் மனம்
வந்துவிட மாட்டானா?
நொடிக்கு ஒருமுறை நோட்டம்
வாசல் கதவுகளும் தேய்ந்திருக்கும்

அடக்கி வைத்த சந்தோஷம்
பீறிடும் அபாயம்
நெஞ்சாங் கூட்டில்
அழகான வலி!

கொழுக் மொழுக் கன்னங்களுடன்
சிரித்த முகமாய்
துள்ளல் நடையுமாய்
தந்தையின் கைப் பற்றி!

ஓடி வந்து அணைத்தான்
நான் எதிர் பார்க்காத ஒன்று
திக்கு முக்காடித்தான் போனேன்
உடன் வெளிப்பட்ட பாசத்தால்!

நொடிக்கொருமுறை அத்தை என்பான்
தாயிடம் பேசிடினும்
தந்தையிடம் பேசிடினும்
அத்தை முகம் கண்டு பேசிடுவான்

யாருக்கும் புரியா
அளப்பறியா அவனின் பாசம்
அன்னியோன்னியம் கண்டு
வியந்தவர் பலர்; மருகியவர் சிலர்

குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்
ஊட்டி விட அடம் பிடிப்பான்
கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்
கண் விழித்ததும் தேடிடுவான்

அவன் அன்பு.....
ஈடேதும் உண்டோ?
வார்த்தைகளில் அடங்குமோ?
புரிய வைக்க முடியுமோ?

எண்ணினால் உள்ளம் பொங்கும்
கண்களில் நீர் தேங்கும்

-- காட்டாறு

Sunday, May 06, 2007

சில்லென காதல் கதை

ரொம்ப நாள் காணாம போனதால ஜில்லுனு ஒரு காதல் கதைல ஆரம்பிக்கலாம்ன்னு தோணியது. சரி... நம்ம காதல் ஜோடிய பார்த்து வரலாமென்று காலையில கெளம்பிப் போனா... அவங்க சரியான ஜோடியா இருப்பாங்க போல. காதல், கல்யாணத்தில முடிஞ்சி, குழந்தைகளோட சந்தோஷமா இருக்குறத பார்த்ததும், நாம ரொம்ப லேட்டுன்னு தோணியது. அவங்களோட காதல் கதைய அவங்க சம்மதத்தோட உங்களுக்க்கு தரலாமென்று இருக்கிறேன்.

படத்தின் விளக்கம் கீழே.


மனதில் ஒரு தேடல்
என்னுயிர் எங்கே என்று
உயிருக்கு உருவம் இல்லையோ
தேடல் தொடருமோ
என்னுடல் ஊணுடலாய் மறையுமோ
குமுறியது நெஞ்சம்
தேடல் உயிருள்ளவரை தொடருமோ
புழுங்கியது புரியாது

=========================================

கண்டேன் என்னவரை
சட்டென்று மின்னல்
கண்டதும் உணர்ந்தேன்
என்னுயிர் அவரே என்று
காதல் கொண்டேன் உடன்
கனிந்து நின்றேன்
என்னுயிர் அவரானால்
என் சுவாசம் அவரானால்
என் வாழ்வு அவரானால்
என் எல்லாமும் அவரானால்?

வயதிற்குரிய நாணம்
பட படத்தது மனம்
சொல்லாமல் போவேனொ
அவர் மனம் திறந்தால் தான் என்ன
மருகியது என் நெஞ்சம்!

=============================

என் துடிப்பு அறியாரோ
எண்ணும் கணம்
என்னருகில் அவர்
வந்தவர் மனம் திறந்தார்
ஒவ்வொரு சொல்லும்
மணி மணியாய்!

பல கோடி கவிதைகள்
கட கடவென பூத்தன
ஒவ்வொரு சொல்லிலும் அவரின் மணம்
பட்பட்டென மாறும் காட்சிகள்
பகல் சொப்பனம் போல்
அவருடன் ஒன்றி வாழ்ந்த
பரவச நிலை!
====================================


காதலர் கணவனானார்
நான் நாம் ஆனோம்
கண்ணின் மணியாக்கினார்
கண நேரம் பிரிந்திடார்!
சுவாசமாய் தாங்கிய என்னுயிரே!
நேற்று போல் தெரியும் உன் அணைப்பு
மாற்றம் ஏதும் இல்லை அதன் அழகில்
உன் மடி வந்து உறங்கிடுவேன்
மரணம் வரை உன்னுள் உறைந்திடுவேன்
ஜென்ம ஜென்மமாய்
உன்னுயிர் கலந்திடுவேன்!

================================
உறவின் சாட்சியாய்


சீண்டலும் கோபமுமாய்
கிண்டலும் நாணமுமாய்
ஊடலும் கூடலுமுமாய்
கேலியும் கூத்துமாய்
தினம் தினம்நாடகம் நிறைவேறும்
கூத்துப் பட்டறை
எங்கள் குடும்பம்




(குட்டியும் குருமலுமாய் நீந்தி விளையாடிய குஞ்சிகளைக் கண்டு மனம் துள்ளி விளையாடியது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணியது. விளைவு தான் இது!)

Sunday, April 22, 2007

என் தேவதை

என் பிள்ளை சொக்க தங்கம்
என்று அம்மா அடிக்கடி சொல்வார்
என் பிள்ளை பட்டை தீட்டிய வைரம்
என்று மார் தட்டுவார் தந்தை

உச்சி முகர்ந்து செல்லக் குட்டி
என்று அணைத்திடுவார் தாத்தா
அவள் வயதொத்த தோழிகளிடம்
என் பேத்தி என பெருமிதபடுத்திடுவார் பாட்டி

தங்கையுடன் பேசினால்
மன நிறைவு என்பாள் தமக்கை
எது கேட்டாலும் வாங்கி தருவாள்
என் அக்கா என இன்முகம் காட்டுவான் தம்பி

என் வீட்டு கதவு திறந்ததும்
பாய்ந்தோடி, மேல் விழுந்து
நாவால் நக்கி தன் அன்பை வெளிப்படுத்தும்
எங்கள் வீட்டு பொமரேனியன் குட்டி

இப்படி,
எல்லாரும் என் மீது உயிரே வைத்திருக்கும் போது
நீ மட்டும் .....
நீ மட்டும் .....

என்னை பார்ப்பது கூட
கேவலம் என எண்ணும்
உன்னைப் பற்றி மட்டுமே
கவிதை எழுத எப்படி முடிகிறது என்னால் !!

-- காட்டாறு

Thursday, April 19, 2007

புகைப்பட பழங்கள்

மேய்ஞ்சிட்டு இருந்தப்போ சர்வேயனின் போட்டோ போட்டி பத்தி பார்த்தேன். உடனே சில வருடங்களுக்கு முன்னால் தோழி ஒருத்தி அனுப்பிய ஈ மெயில் ஞாபகத்து வந்தது..... நீங்களும் பார்க்க, இரசிக்க, மகிழ.... இதோ....


































Tuesday, April 17, 2007

வந்தாரு..... வந்தாரு..... தாய்மையுடன் வந்தாரு!

வந்துட்டார்........... வந்துட்டார்........... வந்துட்டார்........... இந்த தண்டோரா போடாம வர முடியாதான்னு ஓரத்துல உக்காந்திருப்பவங்க மொனகக் கூடாது... ஆமா. காட்டாறு வர்றத சொல்லலைன்னா உங்களுக்குத் தான் திண்டாட்டம். கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்திருப்பீங்க. அழகு பத்தி சங்கிலித் தொடர் வர்றத சொன்னேன். ஆளாளுக்கு தாய்மை பத்தி சொல்லுறாங்களே......... நாம ஒரு மொக்கைப் போடலாம்ன்னு நெனச்சா....... முடிஞ்சா தானே. சரி, நமக்கு தெரிஞ்சத, தெரிஞ்ச மாதிரி எழுதுவோம். அது தான் நம்மால முடிந்ததுன்னு முடிவுக்கு வர்றதுக்குள்ள, நாளும், கிழமையும் ஓடிப்போச்சி!

எல்லாரும் தாய்மை பத்தி அழகுச் சங்கிலில எழுதினதும் எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. உங்க கிட்ட சொல்லாம யாரு கிட்ட சொல்லப் போகிறேன் நான்? கண்கலங்காதீங்க பதிவாளர்களே (அது என்னவோ தெரியலைங்க பதிவாளர்ன்னு எழுதுறப்போ, ஒரு தனி கவுரதையா இருக்குது பாத்தீங்களா). வந்தேன் கதைக்கு.

என் தோழி கருவுற்றாள். முதல் குழந்தை. சந்தோஷம் திக்குமுக்காட வைத்தது. வேலைக்கு செல்லும் பெண்ணிவள். அதனால ஜாலி லாலா ஜிம்கானான்னு பாடிட்டு திரிய முடியாது. ஆனாலும் சுத்தி இருக்கிற எங்களை படுத்தி எடுத்துட்டா. அதாவது சந்தோஷத்த பகிர்ந்து கிட்டா. அம்மாவுடன் இருந்தா எப்படி இருக்கும்ன்னு நெனச்சவளுக்கு புசுக்குன்னு மனசு சோகமாச்சி. இருக்காதா பின்ன. அமெரிக்காவுலல்ல இருக்கிறா. ஊருல இருக்கிற அம்மாவ எப்படி கூப்பிடுறது. கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசைன்ற மாதிரி, தன் குழந்தை அமெரிக்கை பிரஜையாக்கனும் ஆசை; தன் தாயுடன் இருக்கவும் ஆசை. விருந்தாளியா வந்தாங்க அம்மா. நமக்குத்தான் பெரியவங்கள்ளாம் தோஸ்த் ஆகிருவாங்கன்னு வியர்டிருக்கிறேன்ல. மனம் திறந்து நிறைய கதை பேசினோம். அவங்க டீச்சரா இருந்து, மேல மேல படித்தது மட்டும் இல்லாமல், குழந்தைகளையும் தானே கவனித்து வளர்த்து ஆளாக்கியதை பெருமையா சொன்னாங்க. ஒரு சுப முகூர்த்தத்தில் அழகு பெட்டகமாய் ஒரு குட்டி தேவதை பிறந்தாள். கதை குழந்தைய பத்தினது இல்லாததால, ஆசை இருந்தாலும் ரொம்ப விவரிக்கல. சரியா?

தோழிக்கு விடுப்பு முடிந்தது. வேலை செல்ல ஆரம்பித்தாள். அப்போ இந்த தாய் வடித்த கண்ணீர் இன்னமும் என் கண்களை விட்டு நீங்கவில்லை. தன் மகளின் கஷ்டம் காண முடியவில்லை அந்த தாய்க்கு. கீழ்வரும் வரிகள் அனைத்தும் அவருக்குச் சமர்ப்பணம். இது போல் கவலைப் பட்ட அம்மாக்கள், அப்பாக்கள் (தாய்மை இருபாலாருக்கும் பொது என அழகுச்சங்கிலியில் சொன்னது ஞாபகம் இருக்கா?) உலகம் முழுவதும் உண்டு. அவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.


தாய்மையின் உண்மை

உருவானாள் கருவாய்
ஆனந்தக் கூத்தாடியது மனம்
கருவானவள் உயிரானாள்
இப்பூவுலகில் உதித்தாள்

பூவாய் சிரித்தாள்
தத்தி நடந்தாள்
மழலையில் கொஞ்சினாள்
ஆனந்தக் கூத்தாடியது மனம்!

கேள்விக் கணைகள் தொடுத்தாள்
உலகை அறிய முனைந்தாள்
உவகையாய் சிரித்தாள்
மெய்மறந்து திரிந்தது மனம்!

பூவையானாள்
பூப் பூவாய் மலர்ந்தாள்
செவ்வனே இல்வாழ்க்கை
கற்றுக்கொடுத்தது யாரோ; பூரித்தது மனம்!

கருவை சுமந்தாள்
உயிருக்கு உயிர் கொடுத்தாள்
ஒளிர்வாய் துலங்கினாள்
பெருமிதமாய் எண்ணியது மனம்!

பணி அழைத்தது
பகலில் வேலை; இரவில் குழந்தை
தூக்கம் மறந்து ஓடினாள்
பொறுத்துக் கொள்ள முடியா தவித்தது மனம்!

பெற்ற என் மனம் கலங்கியது!
பெற்றதால் அவள் மனம் குளிர்ந்தது!

-- காட்டாறு

Thursday, April 12, 2007

ராணித் தேனியை காணவில்லை! பணித் தேனீக்கள் பரிதவிப்பு! சன்மானம் அறிவிப்பு!

டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... இதனால யாவருக்கும் அறிவிப்பது என்னவேன்றால், ராணித்தேனியைக் காணவில்லை. கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தகுந்த சன்மானம் தரப்படும். டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்.....

ராணித் தேனியை காலத்தின் மாற்றத்திற்கேற்ப மாற சொல்லி (அதாவது உழைக்கச் சொல்லி) அழகு மணங்கள் (பணித்தேனீக்கள்) ஆர்ப்பாட்டம் செய்ய, அரசி தப்பி ஓடியது மட்டுமல்லாது, எங்கோ ஒளிந்து கொண்டார். அவரைக் காணாது தடுமாறிய பணித் தேனிகள், தேன் எடுக்கும் வேலையை மறந்து, ரீரீரீரீரீரீரீரீரீரீரீரீ என்று ரீங்காரமிட்டவாறு அங்குமிங்கும் அல்லாடும் பரிதாப காட்சியைக் காண சகிக்காத மூத்த தேனீக்கள் சோகமயமாக காட்சியளிக்கின்றன. எதிரணி குழுவில்லுள்ள வண்டுகள், தேனீக்களின் இந்நிலைக் கண்டு எக்களித்து உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எக்காள கூச்சலிடுகின்றன. எப்போதும் ஒற்றுமையுடன் பணி புரிந்து வந்த தேனீக்களின் நிலை கண்டு, பூக்கள் யாவும் தன் நிலையிழந்து மகரந்தம் பறிமார மறந்தன. தேன் உண்ண வந்த வண்ணத்துப் பூச்சிகளும், அதுவரை எக்காள சிரிப்புடன் வலம் வந்த வண்டுகளும், தன்னிலை மறந்த பூக்களைப் பரிதாபமாக கெஞ்ச ஆரம்பித்தன. (பசி வந்தால் பத்தும் பறக்கும் போது, வண்டுகள் பறக்காத என்ன?). பூக்களோ ராணித்தேனியை எண்ணி வாடி வதங்கின. பூக்களின் வதங்கிய நிலை கண்டு மானிடர்கள் பித்துப் பிடித்துப் போய் செய்வதறியாது துடித்தனர்.

உலகமே செயலிழந்து நிற்பதைக் கண்ட அழகான, புத்திசாலி தேனி ஒன்று, ராணித்தேனியைக் கண்டு பிடித்து தருபவருக்கு தகுந்த சன்மானம் தருவதாக அறிவித்தால், உலகமே தேட ஆரம்பிக்கும்; ராணி வந்தபின், உலக நிலை மாற்றம் கூறி அவரை வேலை வாங்கிவிடலாம் என்று யோசனை ஒன்று சொன்னார் (கொத்திவிட்டு சென்றார்). அது தான் சரியெனப் பட, மூத்த தேனீக்கள் நிருபர்களைக் கூப்பிட்டு சன்மான தருவதாக சொல்ல நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு தேட ஆரம்பித்தனர் ராணி தேனியை. ராணியோ ஒளிந்துள்ள இடத்திலிருந்து வெளிவரவில்லை இது வரை. மடிந்து போகும் நிலையிலுள்ள பூக்களின் நிலை கண்டாவது ராணித்தேனி வெளி வந்து பணித்தேனீக்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டு UN சம்மன் ஒன்று அனுப்பியுள்ளது.

பின்குறிப்பு:
ராணி தேனி - பின்னூட்டம் மட்டும் இடும் சேதுக்கரசியார்
பணித்தேனீக்கள், வண்டுகள், பட்டாம் பூச்சிகள், மானிடர்கள், UN - தமிழ்மண பதிவர்கள்
தேன் - பதிவு
உழைப்பு - பதிவு இடுவது
அழகான, புத்திசாலி தேனி - அழகுச் சங்கிலித் துவங்கி வைத்த இலவசக் கொத்தனார்
சன்மானம் - 2 சாக்லெட்

பின்னுமொரு பின்குறிப்பு:
நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற

உங்களுக்கு கேக்குதா..... எனக்கு கேக்குது. பொருமாதீங்க. சேதுக்கரசிய கண்டுபிடிக்க வேற வழி தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா எங்கிட்ட மட்டும் சொன்னீங்கன்னா... கிடைக்கிற சாக்லேட்ல பாதி (ஒன்னுல பாதி) உங்களுக்கு!

Wednesday, April 11, 2007

அழகுச் சங்கிலியின் அழகே அழகு

முத்துலெட்சுமி அழகைப் பற்றி அழகா சொல்லிட்டு, என்னையும் சேர்த்து விட்டாங்க இந்த விளையாட்டுல. அழகுன்னா என்ன? என்னால சரியாக விவரிக்க முடியுமான்னு தெரியல. சிலருக்கு வெளிச்சம் அழகா இருக்கும்; வேறு சிலருக்கு இருட்டு அழகா இருக்கும். நிலவைக் கண்டு வியந்துருகும் நம் மனம், சூரியனையும் விட்டு வைக்காது. "தேடலின் புரிதலில் என்னை அழகானவள் என்றது என் மனம்." ஆமாங்க எதிலும் அழகு காணும் நம் மனம் ரொம்ப அழகுங்க. நம்ம மனசு ரொம்ப சந்தோசத்துல துள்ளுற ஒவ்வொரு கணமும் அழகுன்னு தோணுது. அந்த நிமிஷத்துல நம்மை நாமே மறந்து போயிருவோம் பாருங்க..... JK இத ரொம்ப அழகா சொல்லியிருப்பார்:

"What takes place when you look at something which is actually marvellously beautiful: a statue, a poem, a lily in the pond, or a well-kept lawn? At that moment, the very majesty of a mountain makes you forget yourself. Have you ever been in that position?
If you have, you have seen that then you don’t exist, only that grandeur exists. But a few seconds later or a minute later, the whole cycle begins, the confusion, the chatter. So beauty is, where you are not. It is a tragedy if you don’t see this. Truth is, where you are not. Beauty is, love is, where you are not."

அப்படின்னா, அழகுன்னு சொன்னா.... உணர முடியும்; எழுத முடியுமா? தெரியல. முயற்சி செய்து பார்க்கலாம். என்ன சொல்றீங்க நீங்க?

1) வெட்கம்
வெட்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதனால பொதுவா சொல்லப் போகிறேன். வெட்கம் வரும் போது உள்ள அழகைப் பாத்தீங்கன்னா..... பார்த்துட்டே இருக்கலாம். நெசமாத்தான் சொல்லுறேன். அதனால நான் வெட்கத்தை பல பருவங்களாக பிரித்து மேயப் போகிறேன். முதல் பருவம், மழலைப் பருவம். வெட்கப் படுற குழந்தைய பார்த்து நம்ம மனம் ஆனந்த கூத்தாடும் பாத்தீங்களா? அம்மா சேல பின்னால நின்னுட்டு, ஒத்த கண்ணால பாத்துட்டு,..... அழகே அழகு. இரண்டாம் பருவம், வாலிபம். நிறைய குறும்பு; கொஞ்சம் லாஜிக். இந்த பருவத்துல வெட்கம் என்பது தம்மை புகழும் போது மட்டும் வரும். அத கோபமா வெளிப்படுத்துவாங்க பாருங்க.... ரொம்ப அழகா இருக்கும். நீங்க அந்த சமயத்தில சிரிச்சீங்கன்னா..... அவ்வளவு தான். சிரிக்காம, அவங்க கோபத்தை இரசிச்சீங்கன்னு வச்சிக்கோங்க..... வெட்கத்தில் ஓடிப் போயிருவாங்க. மூன்றாம் பருவம் மண வாழ்வின் முதல் படி. அது என்னவோ தெரியலைங்க.... இந்த பருவத்துல எதற்கெடுத்தாலும் வெட்கம் வரும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும். என்ன சொன்னாலும் வெட்கம் வரும். இந்த பருவத்தில் இவர்களைச் சீண்டி அழகு (வேடிக்கை) பார்ப்பவர்கள் ஏராளம். நான்காம் பருவம், முதுமை. தாத்தாவிடம் போய் பாட்டியைப் பற்றியும், பாட்டியிடம் போய் தாத்தாவைப் பற்றியும் கேட்டுப் பாருங்கள். அதுவும் அவர்களின் முதல் சந்திப்பு பற்றிக் கேட்டால், ஒருவரை ஒருவர் இரசித்துக் கொண்டே கதை சொல்லும் தருணங்களில் எங்கேயிருந்து அந்த வெட்கம் வருமோ தெரியாது; தாத்தா, கண் இடுக்கி சிரிப்பார் - வெட்கத்துடன். பாட்டி, இந்த கிழத்துக்கு வேலையில்லன்னு ஒரு லுக் விட்டுடே வெட்கத்துடன் அதட்டுவார். இதை (அவர்கள் வெட்கப்படுவதை) அனுபவித்தவர்களுக்குத் தெரியும்; அத்துனை அழகு முதுமையில் வெட்கம்.

2) பொய்க் (?) காதல்
எங்கள் குடும்பத்தில், என் வயதொத்தவர்கள் நெறையா பேர் ஆண்கள். 4 அண்ணன்கள், 3 தம்பிகள் எனக்கு. இது போதாதுன்னு அவர்களுடைய நண்பர்களுக்கும் நாம தான் அக்கா அல்லது தங்கை. இவங்களுக்கு தூது போவதற்குன்னு பிறந்தவர்கள் நானும் என் அக்காவும். அதனால என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப அருமையான நிகழ்வுகள் ஏராளம். ஒவ்வொன்னும் ஒரு அழகு தான். இதுல எனக்கு ரொம்ப பிடித்தது, தூது போவது. படத்துல பாத்திருப்பீங்க. அதே நம் வாழ்விலும் நடந்திருந்தால்...... very interesting இல்ல..... அந்த பொண்ணு திரும்ப பதில் சொல்லும் வரைக்கும், வீட்டுக்குள்ள குட்டி போட்ட பூனையாட்டம், கால் ரேகை தேய்ந்து போகிற மாதிரி, குறுக்கும் நெடுக்குமா நடை பயில்வாங்க பாருங்க..... அப்போ, அவங்க முகத்துல உள்ள கலவையான எக்ஸ்பிரஷன் ஒரு தனி அழகு. ஆயிரம் முறை அதே கேள்விக்கு வேற வேற பதில் சொல்லனும். அவங்க அஷ்ட கோணலா முகத்த வச்சிட்டு ஒரே யோசனையா வளைய வருவாங்க பாருங்க..... அருமையான அழகு. (இதுல நமக்கு தலையில குட்டும் கிடைக்கும். அது வேற கத.)

3) பாசம்
நான் ஊரிலிருக்கும் போது ஒவ்வொரு சனிக் கிழமையும், சிறுவர் முகாமிற்கும், ஒவ்வொரு ஞாயிறன்று முதியவர் முகாமிற்கும் செல்வது வழக்கம். இப்பொ... அது முடியாதல்லவா. அதனால, ஊருக்கு செல்லும் போது தவறாமல் அவர்களுடன் ஒரு நாள் செலவிடுவேன். அவர்கள் என் மேல் கொண்டுள்ள பாசம் அளப்பரிது. அவர்கள் கண்களில் உள்ள நீர் சொல்லும் அந்த பாசத்தை அழகன்றி வேறேன்பது?

4) தாய்மை
தாய்மையடைவதை நான் இங்கு குறிப்பிடவில்லை. தாய்மையுணர்வை குறிப்பிடுகிறேன். எல்லோருக்குள்ளும் தாய்மை உணர்வு இருக்கும். இது இரு பாலாருக்கும் பொருந்தும். எனக்கு தாய்மையுணர்வு கொஞ்சம் அதிகம் என்று நான் சிறுவயதில் இருக்கும் போதே பெரியவர்கள் சொல்வர். இதை அழகு என்று மருகியவர்களும் உண்டு. வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் என் குழந்தையாக்கிவிடுவேன். நிறைய கதை உண்டு இதன் பின்னால். உதாரணத்திற்கு ஒன்று: என் அம்மா இன்றும் என்னிடம் அவர்கள் தாயிடம் இருந்தது போல் தான் இருப்பார்கள். பாதி வேளையில் யார் தாய் யார் சேய் என்று பக்கத்திலிருக்கும் பலருக்கும் சந்தேகம் வந்துவிடும். எங்கள் அந்நியோன்னியத்தை கிண்டல் பண்ணியவர்கள் பல பேர் உண்டு. எங்க அம்மா இப்பவும் சொல்லுவாங்க. அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தால், உனக்கு நான் மகளாக வேண்டும்ன்னு.

5) நட்பு
இது அழகு என்று நான் சொல்லித்தெரிவதில்லை. ஆயினும் இதை சொல்லாவிட்டால் அழகு மதிப்பற்றதாகப் போய்விடும். கண்டு நட்பு; காணாத நட்பு என்று பல உண்டு. ஆனாலும், நட்பு நட்புதான். அழகோ அழகுதான். நானிங்கு சொல்லப் போவது என் முதல் நட்பு. எனக்கு 2-ஆம் வகுப்பில் கிடைத்த தோழி இன்றும் எனக்கு நெருக்கமானவள். என் வீடு பள்ளிக்கு எதிர். அவளோ ரிக்ஷாவில் வருபவள். என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். நட்பு ஏற்பட ஒரு பென்சில், ரப்பர் போதுமே. அப்புறம் என்ன? இன்று வரை மாறா நேசம். நிறைய பேர் சொல்லலாம். ஆனால், முதல் நட்பின் அழகுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

6) இயற்கை
இந்த அழகை வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது. குழந்தையும் இயற்கையும் ஒன்று. குழந்தையைக் கண்டு குதுகலிக்கும் அதே மனம் தான் இயற்கையைக் கண்டும் குதுகலிக்கும். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகம் இருக்காது. குளமோ, குட்டையோ; இரவோ, பகலோ; இளமையோ, முதுமையோ; பட்ட மரமோ, பழுத்த மரமோ; இலையோ, சருகோ; இயற்கையோ, செயற்கையோ; அப்படியே ஒன்றி போய் விடுவேன். எல்லாமே அழகா தோணும். எல்லாமே நானாகிவிடுவேன். எல்லாருமாகவும் நானாகிவிடுவேன்.

அழகை வரிசைப் படுத்த முடியாது. அதனால எழுதி வைத்து பதிவிடாமல், பதிவுல நேரடியா எழுதிட்டேன். தவறி இருந்தால்..... அழகுன்னு விட்டுருங்க. அழகா இருந்தா இரசிச்சிக்கோங்க.

என்னை எழுத அழைத்த முத்துலெட்சுமிக்கு நன்றி! முன்னால நிக்கிற மூணு பேரு வாங்கப்பா
1) பின்னூட்டம் மட்டும் இடும் அருமை நண்பர் சேதுக்கரசி (??) http://kuttapusky.blogspot.com/
2) தில்லியைக் கலக்கும் தோழி துளசி கோபால் (http://thulasidhalam.blogspot.com/)
3) தில்லானா மங்கை (http://manggai.blogspot.com/)

--- முதல் இருவருக்கும் பதிலாக -----
1) வரவனையான் (http://kuttapusky.blogspot.com)
2) ஆன்லைன் ஆவி (http://avigalulagam.blogspot.com)

Thursday, April 05, 2007

என் காதலி..... நிலா

ஒடிசலா.... இந்த பவுடர் நடிகர்... யாருப்பா அவரு... SJ சூர்யாவோட நடிச்சிதே.... ஒரு பொண்ணு.... நிலா... அத பத்தி எழுதப்போறேன்னு நெனச்சி இந்த பதிவுக்குள்ள வந்தீங்கன்னா...... அப்பிடியே ஜகா வாங்கிருங்கன்னு அசிங்கமா சொல்ல மாட்டேன். இருந்து வாசிச்சிட்டே போகலாம். வந்தமைக்கு நன்றி! இப்போ கதைக்கு வர்றேன்.

இயற்கையை காதலியா நினைக்கிறது எல்லாருக்கும், முக்கியமா கவிஞர்களுக்குப் பிடிக்கும். நிலா இல்லாது போனால்... இந்த கவிஞர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமா போயிடும். நிலா பத்தி கவிதை எழுதாத கவிஞர்களைப் பார்ப்பது ரொம்ப கஷ்டம். கவிதை பற்றி அரைகுறை ஞானம் உள்ள நானும் நிலாவ விட்டு வைக்கல. காதலுக்கும் நிலா தான், காதலியாகவும் நிலா தான், குழந்தைக்கு சோறுட்டவும் நிலா தான்னு ஆகிப் போச்சி. நிலாவ ஓவரா படுத்தி எடுத்துட்டாங்கன்னு ஒரே பீலிங் ஆகி போச்சி. ஒரு நக்கல் கவுஜ ஒன்னு, நிலா கவலையா பேசுற மாதிரி கைவசம் இருக்கு. அத அப்புறமா பதிவுல போடலாம். இப்போ எல்லாரையும் போல நாமளும் நிலாவ ரசிச்ச விதத்தை மட்டும் சொல்லிட்டு போகலாமுன்னு இருக்கேன். ஜூட்....

கண் கொட்டாமல் பார்க்கிறேன்
காதல் வழிய இரசிக்கிறேன்

அண்ணார்ந்து உனை மீண்டும் பார்க்கிறேன்
ஆயிரம் கோடி எண்ணங்கள்

மூச்சி முட்டுகிறது
ப்ஹா என்கிறது பெருமூச்சி

ஆசையாய் உனைத் தழுவி நிற்கிறேன்
உன்னிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் மனதில்

வடித்தெடுத்து சமர்ப்பிக்க ஆசை
நான் கவிஞன் அல்லவே

என்ணங்களில் காதல் வழிகிறது
இரசித்து இரசித்து வரிந்தெடுக்க முனைகிறேன்

மின்னும் நட்சத்திரங்கள்
உன் கூந்தலை அலங்கரிக்கும் பூக்களோ

கூட்டமென செல்லும் வெண் மேகங்கள்
நீ கண் துயில அரவணைக்கும் தலையணைகளோ

வளைந்து வரவேற்கும் வானவில்
உன்னைக் காக்கும் அரணோ

உன் கண்ணத்து மச்சம் போல்
உன்னருகில் இருக்கும் நட்சத்திரம் உன்னவனோ

நீ தேய்வதும் வளர்வதும்
உன்னவனிடம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமோ

உன்னில் தெரியும் வடிவம்
உன்னவனை உன்னில் கொண்டதாலோ

மூன்றம் பிறை
உன் சிரிப்பின் வெளிப்பாடோ

முழு னிலவாய் பிரகாசிப்பது
உன்னவனை குழந்தையாக்கும் என்னமோ

பளிச்சென நீ வெளிப்படுவது
உன்னவனின் வருகையை எதிர்ப்பார்த்தோ

சட்டென மனம் தடுமாறுகிறது
ஒரு வித ஏக்கம்

என் காதலியாய் வந்து போகிறாய் நீ
மனதில் இரணம்

என்னருகில் இல்லா என் காதலி
என் நிலாப் பெண்!


-- காட்டாறு

Tuesday, April 03, 2007

நண்பனின் முதல் இரவு - புது அனுபவம்

ஏனோ நமக்கு முதல் முறை என்பது ஒருவித முக்கியத்துவமான ஒன்றாகிவிடுகிறது. குழந்தைப் பருவத்தில் குப்புற விழுந்தது முதல், தத்தி நடந்தது வரை, வாலிப பருவத்தில் மீசை முளைத்தது முதல் காதல் வயப்படும் வரை, முதுமைப் பருவத்தில் தலை நரைக்க துவங்கியது முதல் இறக்கும் வரை ஒரு சில முதல்கள் முக்கிய வாய்ந்ததாக நம்மால் நினைத்து நினைத்து மகிழவோ, அழவோ வைக்கிறது. மன்னிக்கவும்.... திருமண பருவத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டேன். முதல் புத்தகம், முதல் பயணம், முதல் முத்தம், முதல் பதிவு, முதல் கவிதை, முதல் காதல், இன்னும் பல முதல்கள் நம் வாழ்வில்.

நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் முதல் புது அனுபவங்களை தொகுத்து தரலாமுன்னு இருக்கேன். போதும் நிறுத்து.... கதைக்கு வா என்ற கூக்குரல் காதில் ஒலிப்பதால், அரு(று)மை(வை)யான துவக்கவுரையை நிறுத்திக் கொள்கிறேன்.

அமெரிக்க கனவோட 24 மணி நேரம் பறந்து வந்துருவோம். ஆனா குளிர் காலமா இருந்ததுன்னா.... நாம படுற அவஸ்தை சொல்லி மாளாது. அப்படி குளிர் காலத்துல அமெரிக்கா வர்றவங்க பாவம் பண்ணினவங்கன்னு குடு குடுப்பக் காரன் சொன்னதா எனக்கு ஞாபகம். அப்படி ஒரு குளிர் காலத்தில் அதுவும் பனி விழும் காலத்தில் என் நண்பன் முதன் முதலில் வேலையின் நிமித்தம் அமெரிக்கா வந்தான். அன்று சனிக்கிழமை. பனி 4 அடிக்கு பெய்யுது. பயங்கர குளிரு வேற. விமான நிலையத்தில் போய் நின்னா இவனைத் தவிர அத்தன பேரும் வெளியில வந்துட்டாங்க. எங்கனாச்சும் சீட்டுக்கு கீழ இழுத்து மூடி தூங்கிட்டானோன்னு ஒரு வித கலக்கம் ஆட்கொள்ள, வாசலையே வெறிச்சி பாத்துட்டு இருக்கேன். வெறுங்கைய வீசிட்டு, சிடு சிடுன்னு வர்றான். என்னடான்னா.... பயண மூட்டை (luggage) தொலைஞ்சி போச்சின்றான். ஒரு வழியா அவன வெளில தள்ளிட்டு வந்து, விமான நிலையத்தில் புகார் கொடுக்க வச்சி, வீட்டுக்கு வந்தோம். காலை வீட்டில் வந்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர் விமான நிலைய அதிகாரிகள். வரும் போது ஒரு கடையில் (Meijer) அவனுக்கு இரவு உடுப்பு (என்ன.... ஒரு நீள கால் சட்டையும், மேல் பனியனும் தான்) வாங்கிக் கொண்டு வந்தோம். வரும் வழியெல்லாம் பனிய வெறித்து பார்த்தவாறே, குளிரைத் திட்டிட்டே வந்தான். இத்தனைக்கும் குளிருக்காக ஸ்வெட்டர், இத்தியாதி ஐட்டங்களெல்லாம் போட்டிருந்தான்; காரில் ஹீட்டர் போடப் பட்டிருந்தது.

வீட்டுக்கு வந்து, ஒரு வழியா சகஜ நிலைக்கு அவன் வந்ததும் கத பேச ஆரம்பிச்சோம். 10 வருஷ கதய விடியிறதுக்குள்ள பேச மாட்டோ மான்னு ஏக்கம் எப்போ மனசுக்குள்ள வந்த்துன்னு தெரியல. பேசினோம்; பேசினோம்; பேசிட்டே இருந்தோம். படுக்கப் போகலாமுன்னு முடிவு பண்ணி, வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டி (Security System) பற்றி சொன்னேன். அமெரிக்காவில், வீட்டுக்கு வீடு பாதுகாப்பு பெட்டி உண்டு. இது நமக்கெல்லாம் (அப்போ) புதுசு. வீட்டினுள் இருந்து கொண்டே பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்; வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். இரண்டும் வெவ்வேறு முறையில் செயலாற்றும். பூம் பூம் மாடு மாதிரி சொன்ன கதயெல்லாம் கேட்டுட்டு, போதும் எனக்கு புரிந்தது என்றான். நானும் அக்கறையா, என்ன கேக்காம கதவ தெறக்காதன்னு சொல்லிட்டு படுக்க போய்ட்டேன்.

தலைவருக்கு காலை 5 மணிகிட்ட தூக்கம் கலைந்து விட்டது. ஜன்னல் வழியே வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தவனுக்கு, வரவேற்பரையில் போய் உட்காரலாமுன்னு தோணியிருக்குது. நேரம் போகாமல், அப்படியே ஒவ்வொரு closet கதவா திறந்து திறந்து பார்த்தவன், அறியாமல், முன் வாசலை திறக்கப் போய், பாதுகாப்பு பெட்டி தன் வேலைய செவ்வனே செய்ய, சைரன் சத்தம் கேட்ட எனது நண்பன், துண்டக் காணம் துணியக் காணமுன்னு கதவ தெறந்து வெளிய ஓடிட்டான். நான் அடிச்சி புடிச்சி கீழ இறங்கி வந்து சைரன ஒரு வழியா நிறுத்தி, நண்பனைத் தேட, அவனோ, பக்கத்து வீட்டு செடியின்(Evergreen tree) பின் ஒளிந்தவாறு வெறும் பனியனுடன், செறுப்பில்லாமல் உட்கார்ந்திருக்கிறான். என்னப் பாத்ததும் பாஞ்சி வீட்டுக்குள்ள வந்தத இப்போ நெனச்சாலும் சிரிப்பு தான் வரும். இவனோ, அழுகை முடிந்த பின்னும் விசும்பலை நிறுத்தாத குழந்தை மாதிரி, வீட்டிற்குள் வந்து 30 நிமிடத்திற்கு பின்னும் குளிரில் வெட வெடன்னு அவன் ஆடிட்டு இருந்தது இப்போ நெனச்சா பாவமா இருக்கும். அவன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் பிரசுரிக்கத் தகுந்தவை அல்ல.

இப்படியாக நண்பனின் முதல் அமெரிக்க இரவு, நடுங்கும் குளிரில் சுபமாக, மறக்க முடியாத நிகழ்வாக இனிதே முடிந்தது.


அனுபவம் தொடரலாம் .....................

Monday, April 02, 2007

படித்தவர்களையும், பாமரர்களையும் முட்டாளாக்கும் முட்டாள் பெட்டி

படித்தவர்களையும், பாமரர்களையும் முட்டாளாக்கும் முட்டாள் பெட்டி இந்த தொலைக்காட்சி பெட்டி என்றால் அது மிகையாகாது.

தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பது ஒரு கடமை போல் ஆகிவிட்டது. என்ன செய்ய? இது போல் அடிக்க்ஷனுக்கு ஏதேனும் மாற்று உண்டா எனில், இல்லை எனத்தான் தெரிகிறது. நானும் சுப்பர் மேன் போல் உடை அணிந்தால், அவனைப் போல் சாகசம் செய்ய முடியும் என என் 4 வயது மருமகன் சொல்கிறான். சரி அவன் தான் குழந்தை. வயது வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், செல்வி வீட்டில் ஒருத்தியாகிவிட்டாள் என்று. சரி அத விடுங்க..... எத்தனை பேர் நம் வீட்டிற்கு வருகை தந்திருப்பவருக்கு முதலிடம் கொடுக்கிறோம். அவர்களையும் சேர்ந்து நம்முடன் தொலைக்காட்சி முன் உட்கார வைத்து வெறுப்பேத்துகிறோம். போன முறை நான் இந்தியா போன போது, என் அத்தை வீட்டில் என்னை விரும்பி வரச் சொன்னார்கள். நானும் சரி என்று கூறி சாயங்காலம் 7 மணிக்கு வருகிறேன் என்றேன். உடனே அவர் மதியம் 2 மணிக்கு வந்துவிடு; 7 மணியிலிருந்து சீரியல் ஆரம்பித்து விடும்; உன்னிடம் உட்கார்ந்து பேச முடியாமல் போய்விடும் என்று ஒரு போடு போட்டார்களே பார்க்கலாம்.

நான் சிறு வயதில் ஒரு காலனி போல் உள்ள தெருவில் வசித்தேன். அப்போது தொலைக்காட்சி பெட்டி அவ்வளவாக பிரபலம் அடையாத காலம். பின் 2 வருடங்களில் மள மளவென்று அதன் ஆதிக்கம் பெறுகியது. அந்த காலகட்டத்தில் பள்ளிப் போட்டியில் கீழ்வரும் கவிதையை (கவுஜ என்றும் கூறலாம்) எழுதி பரிசு(?ச்சோப்பு டப்பாதாங்க அந்த காலத்துல) வாங்கினேன். இன்று தூசி தட்டி உங்களுக்கு தருகிறேன். ஏனென்றால் இன்றும் அதே நிலைதான். மாற்றம் ஏதுமில்லை.

===== ஏக்கம் =====
இந்து கிறிஸ்துவ பேதமின்றி
காய்கறி, புளி, அரிசி
கலந்த கூட்டாஞ்சோறு கிளறி
முழு னிலவில் இலை பறிமாறி
கூட்டுக் குடும்பமென
கூட்டணியாய் இருந்தது
10 குடும்பம் கொண்ட
எங்கள் தெரு

புள்ளி வைக்க,
வண்ணக் கோலமிட,
சிறார்கள் எடுபிடியாக,
பல வேறு விரல்களின்
கூட்டு முயற்சியில்
நடுங்கும் மார்கழியிலும்
பொங்கலன்று
சாதி மத பேதமின்றி
அனைத்து வீட்டின் முன்னும்
கோலம் - உணர்த்தும் சமூக உறவை!

24 நான்கு மணி நேரமும்
திறந்திருக்கும் கதவுகளும்,
மதியமானால் மணக்கும் காய்கறி சோறும்,
யாதும் ஊரே என நினைவுபடுத்தும்!
கையில் காசில்லாத போதும்
அன்பு மட்டும் மிஞ்சியிருந்த
பக்கத்து வீட்டு நெருக்கம்!

இன்று,
பணம் காசு வந்தது;
படப் பொட்டி வந்தது;
திறந்திருந்த கதவுகள்
நாடகம் பார்க்க மூடிக் கொண்டன
நலம் விசாரிக்கவும் நேரமின்றி!

-- காட்டாறு

Friday, March 30, 2007

இரயில் பயணம்

வலைப்பதிவில், சென்னை பறக்கும்/மின்சார இரயிலில் வேலைக்கு செல்பவர் எத்தனை பேர் உள்ளனர்? இது சுமார் 13 வருடங்களுக்கு முன் நான் எழுதியது. இப்போது சென்னை வெகுவாக மாறியுள்ளது. இக்காலகட்டத்தில் நான் 13 வருடத்திற்கு முன் உணர்ந்து எழுதிய என் கருத்து இன்று மாறிவிட்டதா என்று அறிய இவ்வருட துவக்கத்தில் ஒரு முறை சென்னையில் இரயில் பயணம் மேற்கொண்டேன். மாற்றம் எதுவும் இருந்ததாக எனக்குப் படவில்லை. ஒரு முறை சென்றதை கொண்டு இன்றும் அப்படித்தான் என்று கூறுவது சரியில்லை என்று பட்டது. எனவே, உங்கள் முன் இக்கவிதையை வைக்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் கூறவும்.


இரயில் பயணம்
தயிர் சாத சட்டியுடன் கொளுத்து வேலைக் கும்பல்
கேலியும் கூத்துமாய் ஒரு நோட்டை கையில் சுழற்சியவாறு கல்லூரிக் கும்பல்
புத்தக சுமையோடு சந்தாஷ சிரிப்புடன் சிறுவர் சிறுமியர் கும்பல்
முண்டியடித்து இடம் கிடைத்த நிறைவுடன் அலுவலகக் கும்பல்
இடம் கிடைக்காத எரிச்சலுடன் ஒரு கும்பல்
--
வயதானவர்கள் வர எழுந்து இடம் கொடுக்கும் தியாக செம்மல்கள்
தன் குறை மறந்து ஜோடியாக பாடி வரும் கவிக்குயில்கள்
எக்காள சிரிப்புடன் இடி மன்னர்கள் ஒரு புறம்
இத்தனை நெருக்கடியிலும்
சுரண்டுவதே தொழிலாய் கொண்ட வக்ர புத்திக்காரர் ஒரு புறம்
--
அவரவர் இடம் வர விசுக்கென்று இறங்கும் மனிதர்கள்
அவசர கதியில் இயங்கும் நம் வாழ்வு
அலுவல் நோக்கி தினம் தினம் பயணம்
இலக்கின்றி நகரும் நம் வாழ்வில்
விலகி நிற்கும் மனித நேயம்
--
தோழமையுமின்றி பகைமையுமின்றி
சிறு புன்னகையுடன் நகரும்
நெருடல் இரயில் பயணம் நன் இன்றைய வாழ்க்கை!
-- காட்டாறு

Wednesday, March 28, 2007

தலைப்பு செய்தி: பூனைகளின் ஆர்ப்பாட்டம். துளசி டீச்சர் திண்டாட்டம்


முன்குறிப்பு:
காட்டாற்றுக்கும் இந்த பூனைகளின் நடுவுலைமைத்தவறா எண்ணங்களுக்கும் சம்பந்தம் இல்லை.



வீட்டுல பம்முது பூனைக்குட்டி!

கண்டீரா கண்டீரா
பூனை ஒன்னு கண்டீரா
எங்க போனது கண்டீரா
செல்லமா வளர்ந்தது கண்டீரா


கண்டேனே கண்டேனே
வீட்டு பரணுல பம்முறதக் கண்டேனே
வயசான பூனை ஒன்னு
அதன் பின் குட்டி ஒன்னு

செல்வங்களே வாங்க
காரணம் சொல்லிப் போங்க
பரண் கோழைக்கு சொந்தம்
வீறு கொண்டு வாங்க

தமிழ்மணத்துல
மியாவ் மியாவ்
துளசி டீச்சர் ஒருவர்
மியாவ் மியாவ்

பூனைக்கு பாடம் சொல்ல
மியாவ் மியாவ்
கேட்டேன் நானும்
மியாவ் மியாவ்

வயசான காலத்துல
மியாவ் மியாவ்
எனக்கெதுக்கு டீச்சர்
மியாவ் மியாவ்

போதும் இந்த டார்ச்சர்
மியாவ் மியாவ்
துளசி டீச்சருக்கு மணி கட்டுறது யாரு
மியாவ் மியாவ்

கண்டீரா கண்டீரா
பூனை ஒன்னு கண்டீரா
எங்க போனது கண்டீரா
செல்லமா வளர்ந்தது கண்டீரா

கண்டேனே கண்டேனே
கூட்டமா போறத கண்டேனே
நாட்டாம பண்றத கண்டேனே
மணியுடன் பூனைக்குட்டி ஒன்னு
எடுப்பா நிக்கிறத கண்டேனே!

Tuesday, March 27, 2007

எட்டிப்பார்க்கலாம்.... தப்பில்லை.... விளைவுகளுக்கு பொறுப்பு நீங்களே

நெஞ்சில் உரமிருந்தால் ....... தொடரவும். விளைவுகளுக்கு நீங்க... நீங்க.... நீங்க மட்டுந்தேன் பொறுப்பு.

பொன்ஸ் அவர்களுக்கு, மகளிர் சக்தியிலிருந்து நீக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துட்டு மேலே வாசிக்கவும்.
அபி அப்பா, சேதுக்கரசி, மை பிரண்டு சரவணன், கோபிநாத், தம்பி, சென்ஷி, கண்மணி யக்கோவ் (காட்டு மாட்டுத்தனமா திட்டிடீகல்ல...... கா வுடாதீக.... கு.ச்சுப்ரமணிக்கு புஸ்கோத்து வாங்கி அனுப்புறேன்), முத்துலெட்சுமி யக்கோவ் (கா வுடாதீக.... தம்பி புள்ள சைக்கிள் தூசி தட்ட தட்டாமல் வாரேன்), இன்னும் எல்லாருக்கும் ஒரு வேண்டுக்கோள். இனி என்னால நீங்க கண்கலங்காம வலம் வர என்னாலான முயற்சி எடுக்கிறேன். அதுக்கு இந்த பதிவு மட்டும் விதி விலக்கு...... அடிக்க வராதீக...... படிக்க வாங்கன்றேன்.
மங்கை, புதியவர்களை தேர்ந்தெடுத்தது உங்கள் பெருந்தன்மை. ஆனா, ஏனுங்க உங்களுக்கு என் மேல கோவம். வந்ததும் வராததுமா weirdo-வா இருக்க சொல்லுறீக. நான் என்ன பாவம்..... இல்லீங்கோ... நீங்க என்ன பாவம் செய்தீகன்னு தான் தெரியல...... பரவாயில்லை.... நீங்க பயந்து ஓட மாட்டீகன்னு நம்பிக்கையில இத தைரியமா எழுத ஆரம்பிக்கிறேன். நானே எழுதுறதோட நம்மளைப் பற்றி தெரிந்த அறிந்த நண்பர் பெருமக்களை கேட்டா எப்படியிருக்கும்னு அவுகள கேட்டா..... ரொம்பதான் கஸ்ட படுத்திபுட்டேன் போல...... எப்பப்போவ்...... அவங்க சொன்னத நான் எழுத மாட்டேன்பா. எனக்கே பயமாருக்குதுன்னா........ சரி ஓவர் பில்டப் கொடுக்காம மேட்டருக்கு வான்றீங்களா....

1) பழகுவது
குழந்தைகளிடமும், வயதில் என்னைவிட சிறியவரிகளிடமும். வயதானவர்களிடமும் வெகு சுலபமாக பழகிவிடுவேன். உடனே ஒன்னுக்குள்ள ஒன்னா ஆயிருவேன். பெரும்பாலும் குழந்தைகள் என்னை அவர்கள் வயதொத்தவர்களாகத்தான் நினைத்து பழகுவர். (அவங்க வயசுக்கு இறங்கி போறதுனால, லூசுன்னு நினைச்சி விளையாடுவாங்களோன்னு பல நாள் சந்தேகம் வரும். புறங்கையால ஒதுக்கிருவேன்ல.). பெரியவர்களோ, அவர்கள் பேத்தி/மகள் போலெண்ணி கதை பேசுவார்கள். (பெரும்பாலும் எங்க காலத்துலன்னு தான் ஆரம்பிக்கும்.... ஒருவேளை இவங்களும் அவங்க வயதொத்தவரா எண்ணுவார்களோ... ச்ச்ச்ச அதல்லாம் இருக்காது.) மேலே கூறியவை வியர்டு இல்லை. இதோ அடுத்த வரியை வாசிக்கவும். என் வயதொத்தவர்களிடம் பேசவே காசு கேட்பேன். ஹி ஹி ஹி.... நெஜமாகவேங்க.... என்னைப் பொறுத்தவரை என்னுடைய First impression is always bad impression. என்னை முதலில் பார்க்குமுன் என்னைப் பற்றித் தெரியாதிருந்தால், நான் முசுடு என்று போய்விடுவீர்கள். மூன்றாம் முறை (மெய்யாலுமே மூன்றாவது நான்காவது முறை தான்) பார்க்கையில், நீங்கள் பேசாவிட்டாலும் (நீங்க எதுக்கு முசுடு கிட்ட பேசப்போறீங்க) நானாக வந்து பேசி பழகுவேன். பேசியதும் தோழமையாகி விடுவேன். அப்புறம் என்ன ஒரு நாள் ஏனடா இவளோட போய் பேச முயற்சி பண்ணினோமுன்னு ரேஞ்சுக்கு நினைக்க வச்சுருவென். அதுவும் உங்கள்ட்ட பேசி அல்ல... உங்கள் குழந்தைகளிடம் பழகி..... ஹி ஹி ஹி ....

2) சிரிப்பு
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே(?) என்னுடைய trade mark சிரிப்பு தான். அதுவும் வாய் விட்டு சிரிப்பேன். இது எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப ஜாலி டைப்னால கூட இருக்கலாம். அவங்க ஜோக்கடிக்க சிரிக்க யாராவது வேண்டாமா? எனக்கு கோபம் வருவது ஆடிகொரு முறையாக இருக்கும். அப்படி கோபம் வந்தாலும் அமைதியாகிவிடுவேனே தவிர சத்தம் மட்டும் வராது. என் ஒவ்வொரு பருவத்திலேயும், சிரிக்காமல் பேச வராதா என்று யாராவது ஒருவராவது கேட்டிருப்பார்கள் என்னிடம். இது என்ன வியர்டா.... கண்மணி யக்கா பகுதிய படிக்கிறவங்க எல்லாம் ஆபிஸ், ரோடு, மாடு, மட்டின்னு கண்ட இடத்துல இருந்து சிரிக்கலயா-ன்னு கேக்குறது இங்கே வரைக்கும் கேக்குதுங்கோ. அதை விடுங்கள். இப்புடு சூடு.... இன்றும் Tom & Jerry, Woody woodpecker பார்த்தால் வாய் விட்டு சிரிப்பேன். என் தோழரின் மகன் 7 வயது சிறுவன், நான் சிரிப்பதைப் பார்த்து weirdo என்று செல்லமாகத்(? நெனைப்பு தான் எனக்கு) திட்டியிருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! என்னைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர்கள் காமெடி படத்திற்கு என்னை தியேட்டருக்கு கூட்டிச்செல்ல அவ்வளவு யோசிப்பார்கள்! யாரவது ஜோக் ஏதாவது சொல்லப்போக கொஞ்சம் டைம் கெடச்சாலும் அத நெனச்சி நெனச்சி சிரிப்பேன். திடீர் திடீருனு சிரிச்சா யாருக்கு தான் பயம் வராதுன்னு சொல்லுங்க.

3) புத்தகம் வாசிப்பது
ஆன்மீகம், தத்துவம், மித்தாலஜி (புராணக்கதைகள்), சிறுவர்க்கான படக்கதை படிக்க ரொம்பப் பிடிக்கும். ஓஷோ, ஜெட் மெக்கென்னா, வேதாத்ரி, ஜிக்கி வாசுதேவ், ஜெர்ரியோட Talking with God புடிக்கும். இதுல என்ன வியர்ட்டா இருக்குன்னு யோசிக்கிறது புரியுது. கட்டிலை சுற்றி புத்தகங்கள் குவிஞ்சு கெடந்தால் தான் தூக்கம் நன்றாக வரும். வெரைட்டியா கெடக்குமில்ல. அட்டை டு அட்டை தான் படிப்பேன்ற ரகசியத்த உங்களுக்கு மட்டும் காதுல சொல்றேன். நடுவுல உள்ளது தலைக்கு வைத்து படுத்தா தானா மனசுக்குள்ள போயிருமாமில்ல.... ஒருமுறை சொல்லாமல் என் ரூமுக்கு வந்த என் தோழி அசந்துட்டால்ல.... அவளுக்கு மயக்கம் வராத கொற தான். ஒரே தும்மல் தான் அவ கிட்டேயிருந்து. நூலக காப்பாளரே பலமுறை நீங்கள் நெஜமாகவே ஒரு வாரத்தில் இத்தனையும் படிச்சுருவீங்களான்னு கேட்ட கதையும் உண்டு. சி(ப)ல சமயம் ஒரு மாதிரியா பாத்ததும் உண்டு. பின்ன என்னங்க... லைப்ரரி போய் ஆன்மீக செக்க்ஷன் முடிஞ்சதும், குழந்தைகள் செக்க்ஷன்ல நின்னு மேய்ஞ்சிட்டு இருந்தால்..... ஏதோ வெளியில தொரத்தாம இருக்குறதுக்கு நன்றி சொல்லனும் அவங்களுக்கு.

4) Road trip (ஊர் சுற்றுறத ரீஜண்டா எழுதிருக்கிறேன்)
இந்தியால இருந்தவரைக்கும் தமிழ் நாடும், கேரளாவும், கர்னாடகாவும், அழுது பொலம்பிருக்குதுல்ல.... நான், என் தம்பிமார் 2 பேர், தோழி ஒருத்தி அப்படின்னு ஒரு கோஷ்டி போட்டுட்டு இதோ வாரோம்ன்னு கெளம்பினா, எங்க அம்மாவுக்கு தெரியும் 2 நாள் கழிச்சி தான் கோஷ்டி வந்து சேரும்ன்னு. அப்படியே செங்கோட்டை போய் கோழி வறுவல் சாப்பிட போறோம்ன்னு (இத்தனைக்கும் நான் விவேகானந்தர் பேச்சைக் கேட்டுட்டு காய் கறிக்கு மாறியிருந்த நேரமது) கெளம்பி, குற்றாலம் போய் குளியல் போட்டுட்டு, அப்படியே மதுர வந்து, அம்மாவுக்கு ஒரு போன் பண்ணி, கொடைக்கானல் போறோம் அப்படின்னு போன் பேசி வைகுறதுக்குள்ள மனசு மாறி பொள்ளாச்சி டாப் ஸ்லிப் கெளம்பி, அங்கிருந்து ஊட்டி போய்.... முது மல வழியா மைசூர் இறங்கி... இப்ப்ப்ப்ப்போ நெனச்சா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னுனுனுனுனுனுது. இதே கத நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம் நடக்கும். அமெரிக்கா வந்ததும், ஆருயிர் தோழி (அதே இந்திய குடிமகள் தான்) இருக்குமிடத்திலே வேல கிடைக்க, இப்போ புது விதமா சுத்துறோம். என்னன்னு கேக்குறீங்களா...... மயக்கம் போடாம கேட்கனும். ஒரு சாம்பிள் இங்கே. ஒரு முறை வலது புறம் மட்டும் திரும்பி ஓட்டுவோம்ன்னு திட்டம் போட்டு (!?), வட கிழக்கு மூலையிலிருந்து (மிச்சிகன் மாநிலம்) மேற்கே வந்துட்டோ ம்மில்ல (சான் பிரான்சிஸ்கோ வந்து தான் அடங்கினோம்). எடுத்துக் கொண்ட நாட்கள் அதிகமில்லை ஜெண்டில் உமன்/மேன். 5 நாட்கள் தான். அப்புறம் அங்கேயிருந்து விமானத்துல திரும்பிப் போனது வேற கத. இது மாதிரி அட்வென்சர் சுற்று பயணம் நிறைய. இதெல்லாம் சத்தியமா உன்மை. இப்போ கூட ...... சரி போதும் நிறுத்துன்னு சவுண்டு உடுறாங்கப்பா.

5) கண்டிப்பா அஞ்சாவதும் வேணுமான்னு யோசிச்சு சொல்லுங்க. இங்கிட்டு உள்ள மக்கமாரேல்லாம் பழய கத விலா வாரியா எடுத்துவுட்டு எழுத சொல்றாக. முடிவு உங்க கையில.

அப்போ வாரேன்.




பின்குறிப்பு:
இது வேறையாக்கும் புலம்பாதீக. டக்குன்னு ஒன்னே ஒன்னு சொல்லிட்டு போரேன். ரொம்ப நாளா இரண்டும், மூன்றும் எனக்கு வியர்டா தெரிஞ்சதே இல்லீங்க. ஒன்னாவது எனக்கே புரியாத புதிர். ஹி ஹி ஹி....