நீயும் என் அன்னையேஉன்னை கண்ட இன்று
காலவேந்தன் பின்னோக்கி இழுத்துச் செல்ல
மெல்ல விரிந்து மனதில் தங்கிய காட்சி
உள்ளம் தான் எத்துணை ஆரவாரிக்கிறது
அரைக்கால் டவுசருடன் நான் திரிந்த அந்த அருமையான நாட்கள். கால் இறுதி விடுமுறை என்னை கூத்தாட வைக்க, தலைதெறிக்க வீடு சென்று, புத்தக மூட்டைதனை தூக்கியெறிந்து, கால் தரை படாது ஓடிய அக்கணம், இரு கரங்கள் எனை இழுத்தணைத்தது. உனைக் கண்டதும் விரைந்து ஓடத் துவங்க, விரட்டி விரட்டி எனைத் தொடர்ந்து, வெட்க மிகு, என் தாயின் முந்தானை தேட, கேலியுடன் தான் அவள் மிருதுவாக எனை அணைக்க, பெரியவனாக நான் தள்ளிவிட்டேன் அவளை. அவள் வரவெண்ணி களித்திருந்த போதிடினும், அவள் வந்ததும் ஓரக்கண் பார்வையாய் நான். நான் என் சகஜ நிலைக்கு வர, அவள் செய்த குறும்புகள், என்னையும் அறியாமல் சிரிக்கிறேன் இன்று.
பாட்டி தான் அவள் தன் பக்கம் இழுத்து, தலை நிறைய எண்ணெய் கொட்டிவிட, அவள் முகம் போன போக்கு. அப்பப்பா… காண கண் கோடி வேண்டும். என் சிரிப்பு அவளை வெறுப்பேற்ற, குமுறினாள் தன் தாயிடம். தாழம்பூ வைத்து பின்னலிட்ட அவள் ஜடை, என் கைவசம் சிக்கித் தவிக்க வைக்கும் என் குறும்பு.

காட்டுப் புலியென்றும், கிணற்றுக்குள் பேயென்றும் கதை சொல்லி கிடுகிடுக்க வைப்பாள். பயந்து நான் அலறவே, தட்டிக் கொடுத்து உறங்க வைப்பாள்; கால் போன போக்கிலே, காட்டெருமை கதை பேசி கை பிடித்தே நடந்திடுவாள்; பால் சோறு ஊட்டிடுவாள். யாரும் அறியா வண்ணம் ஒரு கவளம் உண்டிடுவாள்.
கேலிப்பேசி நான் துள்ள, செல்லக் கோபமாய் அவள் கை ஓங்கி வர, பிரளயம் உண்டாகும் அவ்வீட்டினிலே. என் அன்னையுடன் சண்டையிடுவாள். பேச மறுத்து முகம் திருப்பிடுவாள். என்னை மட்டும் கொஞ்சிடுவாள்; என் தாய் அறியாது.
மாப்பிள்ளை என்றனர். நாணி கவிழ்ந்த அவளை கேலி செய்தனர். புதியதாய் அவள் எனக்கு. திருமணம் முடிந்தது, புதியனளாய் அவள். நடையில் துள்ளல் இல்லை, வார்த்தையில் கேலி இல்லை. என்னை இழுத்து அணைப்பாளும் இல்லை. காலம் தான் மாறிப் போனது.
கேலி செய்யும் பருவம் எனதானது. கேட்டு மகிழும் பருவம் அவளானது. நாம் கேட்காமலே மாறிப்போனது எப்போது? காளையாய் நான். கல்லூரி கதை சொல்ல, புதிதாய் கேட்பாள்; எத்தனை முறை கேட்டிருப்பினும், வாய் விட்டு சிரிப்பாள் முதல் முறை கேட்பவள் போல். அவள் சிரிக்கவே பல பொய் கதைகள் உருவான காலமும் உண்டு. பொய்யென அறிந்தும், மெய்யென கனிவுடன் கேட்பாள். கதை கதையாய் நான் அளந்துவிட, கொல்லென சிரித்து, கண்ணீர் துடைப்பாள். அவளை சிரிக்க வைப்பதில் எனக்கின்பம்.
மறைத்து வைத்து காசு கொடுப்பாள். மறுத்திடின் முறைத்திடுவாள். வளரும் பிள்ளை என்பாள்; வளர்ந்த பிள்ளையென அறிந்திடினும். அவள் வீட்டு அவலம் மறைத்து, கவள உருண்டை என் வாயில் திணிப்பாள்.

என் ஆசைகளும், கனவுகளும் அவளறிவாள். அவளுள் புதைந்த ஆசைகள் என்னவோ? கனவுகள் என்ன ஆனதோ? நானும் கேட்டதில்லை; அவளும் சொன்னதில்லை. அவளுக்கென கனவுகள் இல்லாமலா இருந்திருக்கும்?
பதின்ம மாத குழந்தையின் த்தைக்கு கொண்டாடியவள்
பத்து வயதில் விரட்டி ஓடி மகிழ்ந்தவள்
பதினைந்து வயதில் சரிக்கு சரி வாதிட்டவள்
பதினெட்டு வயதில் தோழியானவள்
என்றென்றும் என் தாயும் ஆனவள்
எனதருமை அத்தையம்மா!
இன்று உன்னைக் கண்டதும், என்னை பெற்ற அன்னையை கண்ட மகிழ்ச்சி; தோழியை கண்டெடுத்த துள்ளல். எனதருமை அத்தையே, நீயும் என் அன்னைதான் என்பதை உன்னால் மறக்கவோ, மறுக்கவோ முடியுமோ?

அன்புடன்,
என் செல்ல அத்தையின்
உன் செல்ல மருமகன்.