Thursday, May 10, 2007

அத்தையின் மருமகன்


இரண்டு வருட இடைவெளியில் சந்திப்பு
அருமை மருமகன் எனைக் காண வருகிறான்
உள்ளம் உவகையாய் அவனின் வருகை காண
ஞாபகம் இருக்குமா இரு வயதில் களித்த அத்தையை?

உள்ளும் புறமும் தவிக்க
விமான நிலையம் தேய
இங்கும் அங்குமாய் நடை
கால்களும் பாரமாய்

ஆலாய் பறக்கும் மனம்
வந்துவிட மாட்டானா?
நொடிக்கு ஒருமுறை நோட்டம்
வாசல் கதவுகளும் தேய்ந்திருக்கும்

அடக்கி வைத்த சந்தோஷம்
பீறிடும் அபாயம்
நெஞ்சாங் கூட்டில்
அழகான வலி!

கொழுக் மொழுக் கன்னங்களுடன்
சிரித்த முகமாய்
துள்ளல் நடையுமாய்
தந்தையின் கைப் பற்றி!

ஓடி வந்து அணைத்தான்
நான் எதிர் பார்க்காத ஒன்று
திக்கு முக்காடித்தான் போனேன்
உடன் வெளிப்பட்ட பாசத்தால்!

நொடிக்கொருமுறை அத்தை என்பான்
தாயிடம் பேசிடினும்
தந்தையிடம் பேசிடினும்
அத்தை முகம் கண்டு பேசிடுவான்

யாருக்கும் புரியா
அளப்பறியா அவனின் பாசம்
அன்னியோன்னியம் கண்டு
வியந்தவர் பலர்; மருகியவர் சிலர்

குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்
ஊட்டி விட அடம் பிடிப்பான்
கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்
கண் விழித்ததும் தேடிடுவான்

அவன் அன்பு.....
ஈடேதும் உண்டோ?
வார்த்தைகளில் அடங்குமோ?
புரிய வைக்க முடியுமோ?

எண்ணினால் உள்ளம் பொங்கும்
கண்களில் நீர் தேங்கும்

-- காட்டாறு

Sunday, May 06, 2007

சில்லென காதல் கதை

ரொம்ப நாள் காணாம போனதால ஜில்லுனு ஒரு காதல் கதைல ஆரம்பிக்கலாம்ன்னு தோணியது. சரி... நம்ம காதல் ஜோடிய பார்த்து வரலாமென்று காலையில கெளம்பிப் போனா... அவங்க சரியான ஜோடியா இருப்பாங்க போல. காதல், கல்யாணத்தில முடிஞ்சி, குழந்தைகளோட சந்தோஷமா இருக்குறத பார்த்ததும், நாம ரொம்ப லேட்டுன்னு தோணியது. அவங்களோட காதல் கதைய அவங்க சம்மதத்தோட உங்களுக்க்கு தரலாமென்று இருக்கிறேன்.

படத்தின் விளக்கம் கீழே.


மனதில் ஒரு தேடல்
என்னுயிர் எங்கே என்று
உயிருக்கு உருவம் இல்லையோ
தேடல் தொடருமோ
என்னுடல் ஊணுடலாய் மறையுமோ
குமுறியது நெஞ்சம்
தேடல் உயிருள்ளவரை தொடருமோ
புழுங்கியது புரியாது

=========================================

கண்டேன் என்னவரை
சட்டென்று மின்னல்
கண்டதும் உணர்ந்தேன்
என்னுயிர் அவரே என்று
காதல் கொண்டேன் உடன்
கனிந்து நின்றேன்
என்னுயிர் அவரானால்
என் சுவாசம் அவரானால்
என் வாழ்வு அவரானால்
என் எல்லாமும் அவரானால்?

வயதிற்குரிய நாணம்
பட படத்தது மனம்
சொல்லாமல் போவேனொ
அவர் மனம் திறந்தால் தான் என்ன
மருகியது என் நெஞ்சம்!

=============================

என் துடிப்பு அறியாரோ
எண்ணும் கணம்
என்னருகில் அவர்
வந்தவர் மனம் திறந்தார்
ஒவ்வொரு சொல்லும்
மணி மணியாய்!

பல கோடி கவிதைகள்
கட கடவென பூத்தன
ஒவ்வொரு சொல்லிலும் அவரின் மணம்
பட்பட்டென மாறும் காட்சிகள்
பகல் சொப்பனம் போல்
அவருடன் ஒன்றி வாழ்ந்த
பரவச நிலை!
====================================


காதலர் கணவனானார்
நான் நாம் ஆனோம்
கண்ணின் மணியாக்கினார்
கண நேரம் பிரிந்திடார்!
சுவாசமாய் தாங்கிய என்னுயிரே!
நேற்று போல் தெரியும் உன் அணைப்பு
மாற்றம் ஏதும் இல்லை அதன் அழகில்
உன் மடி வந்து உறங்கிடுவேன்
மரணம் வரை உன்னுள் உறைந்திடுவேன்
ஜென்ம ஜென்மமாய்
உன்னுயிர் கலந்திடுவேன்!

================================
உறவின் சாட்சியாய்


சீண்டலும் கோபமுமாய்
கிண்டலும் நாணமுமாய்
ஊடலும் கூடலுமுமாய்
கேலியும் கூத்துமாய்
தினம் தினம்நாடகம் நிறைவேறும்
கூத்துப் பட்டறை
எங்கள் குடும்பம்




(குட்டியும் குருமலுமாய் நீந்தி விளையாடிய குஞ்சிகளைக் கண்டு மனம் துள்ளி விளையாடியது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணியது. விளைவு தான் இது!)