Wednesday, August 15, 2007

அறுபதில், அறுபதிலிருந்து பேசலாமா?

அறுபதாம் சுதந்திர தினம். இந்த நன்னாளில், எனக்கு பரிச்சயமான, நான் பின்பற்றுகிற ஒன்னு; எல்லோரும் அப்படியிருந்தால் நல்லா இருக்குமேன்னு நான் தினம் நினைக்கிற ஒன்னை உங்களுக்கும் சொல்லலாமின்னு தான் இந்த பதிவு. குழந்தையும் தெய்வமும் ஒன்னு. ஏன்னா அவங்க என்ன எப்போ நெனைக்கிறாங்கன்னு சொல்ல முடியாது. :-) அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் தெய்வங்கள் தான். ஏன்னா, அவங்களும் குழந்தைகளும் ஒன்னாச்சே. அறுவதில் அறுவதைப் பற்றி பேசுவது சரியாயிருக்குமின்னு தோணுது. அய்ய… நான் என் வயசை சொல்லலப்பா…..

நம்ம தலைவர் ஆறிலிருந்து அறுபது வரை சொல்லிட்டுப் போய்ட்டார். நம்ம அறுபதிலிருந்து எதுவரை பத்தி சொன்னாலென்னன்னு தோணிய எண்ணங்கள் தாம் இவை. அவரைப் போல முடியலைன்னாலும், ஓரளவுக்கு எனக்கு(!) புரியிற மாதிரி, சுவாரசியமா (எனக்கு தான்) எழுத முயற்சிக்கிறேன்.

அறுபதுக்கு மேல குழந்தை போல் ஆயிருவாங்கன்னு கேள்வி பட்டிருக்கோம். ஏன்… நாமளே சொல்லுவோம். ஆனால் உண்மையிலே குழந்தை தானே என எண்ணி வழிவிட்டிருக்கோமா என்றால், பதில் கேள்விக்குறிதான். நம்ம என்ன செய்யிறோம், எப்படி நடந்துக்குறோமின்னு நான் சொல்ல வரல. அவங்க, அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், குணம் எப்படி குழந்தை குணமா இருக்குதுன்னு பார்க்கலாம். சரியா? 15 வயது வரை குழந்தைகள் என்பது என்னுடைய கருத்து. அதனால ஒப்பீடு 15 வயதுக்குள் மட்டும் தான். எழுதியிருக்கிற அத்தனை கருத்துக்களும் என்னோட கருத்து தான். சண்டைக்கு வந்தாலும், ஈன்னு சிரிச்சிட்டு போயிருவேன். ஏன்னா நானும் குழந்தை தான். ;-) 15 வயசுன்னா குழந்தை தானே.

இங்கே சின்ன குழந்தை 15 வயதுக்குட்பட்டவர்கள். பெரிய குழந்தை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

தூக்கம்: 1 வயதுக்குள்
சின்ன குழந்தை:
நமக்கு தூக்கம் வரும் போது இவங்களுக்கு தூக்கம் வராது. அவங்களுக்கு தூக்கம் வரும் போது, நாம் அன்றாட கடமைகளை செய்ய வேண்டியதாயிருக்கும். 2 அல்லது 3 மணி நேரம் தான் தூங்குவாங்க. அவங்களுக்கு தூக்கம் வரும் போது தூங்க விடலைன்னா…… வ்வீச் வ்வீச் தான்.
பெரிய குழந்தை: கோழித்தூக்கம் போடுவாங்க. கேட்டா, தூங்கவேயில்லைன்பாங்க. சும்மா வாய கிளறுனோமோ, குதறிருவாங்க.

மற்றவரைப் போல் செய்தல்: 1-2 வயதுக்குள்
சின்ன குழந்தை: கூட இருக்குறவங்க என்ன செய்தாலும் அதே போல செய்வாங்க. சொல்லிக் கொடுத்தவுடனே செய்வாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா, நாம நெனைக்காத தருணத்தில செய்து காண்பித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திருவாங்க.
பெரிய குழந்தை: அவங்க எடத்துல இருக்குறவரைக்கும் எதுவும் புதுசா கத்துக்கனுமின்னு அவசியம் இருக்காது அல்லவா. புதுசா கத்துக்க வேண்டிய கட்டாயம் வந்தால், நாம சொல்லிக்கொடுத்தா, எனக்கு எல்லாம் தெரியும். உன்னை படிக்க வச்சி ஆளாக்குனதுக்கு, நீ எனக்கு சொல்லித் தர்றீயான்னு ஒரு பார்வை…. இல்லை சொலல் இருக்கும். ஆனா, டக்குன்னு புடிச்சிப்பாங்க. என்ன புரிஞ்சிச்சோன்னு நெனைக்கிற போது, அழகா செய்து அசத்திருவாங்க.

நிறைவு: 2-4 வயதுக்குள்
சின்ன குழந்தை: வயிறு நெறஞ்சியிருந்தா, ரொம்ப தெம்பா ஓடியாடி விளையாடுவாங்க. சள சளன்னு பேசுவாங்க. நமக்கு புரிஞ்சா, அவங்க நடையில ஒரு துள்ளல் இருக்கும். புரியலைன்னா, வேற கதை பேச ஆரம்பிச்சிருவாங்க
பெரிய குழந்தை: அவங்க மனசு நெறஞ்சியிருந்தா, அவங்களப் போல் நக்கல் பண்ண யாராலும் முடியாது. பழகி பார்த்தவங்களுக்கு அது புரியும். உடம்புல தெம்பு இல்லைன்னாலும், மனசுல தெம்பு வந்துதுன்னா, ஒரு துள்ளல் நடையிருக்கும் அவங்க பேச்சில. பேசிட்டே இருப்பாங்க; கேட்க ஆளிருந்தால்.

செவிமடுத்தல்: 4-7 வயதுக்குள்
சின்ன குழந்தை: இது என்னப்பா/என்னம்மா அப்படிம்பாங்க. நாம விளக்க ஆரம்பிச்சா, எங்கேயோ இருக்கும் அவங்க கவனம். அரைகுறையா கவனிக்கிற மாதிரி இருக்கும். நாம சொல்லி முடிக்கிறதுக்குள்ள அடுத்த கேள்வியோட ரெடியாயிருவாங்க. எப்பவாது நாம் சொன்ன விளக்கத்தை நமக்கே சொல்லுவாங்க.
பெரிய குழந்தை: தெரியலைன்னாலும்/புரியலைன்னாலும் தானே வந்து கேட்க மட்டாங்க. ஆர்வமா பார்த்துட்டு இருப்பாங்க. நாம குறிப்பறிந்து விளக்கனும். அப்படி விளக்கும் போது, ஏதோ கண்டுக்காத மாதிரி இருக்கும். ஆனா உன்னிப்பா தான் கேப்பாங்க. மனசுல குறிச்சிக்குவாங்க. நாம விளங்குதா கேட்டா, கோபம் வந்துரும். “எனக்கெல்லாம் தெரியும்” அப்படின்னு ஒரு லுக்கு விடுவாங்க. ரொம்ப நேரம் விளக்கம் கொடுத்தா போரடிச்சிரும். டக்குனு வேற இடத்துக்கு மாறிருவாங்க.

தன்னையறிதல்: 7-9 வயதுக்குள்
சின்ன குழந்தை: அவங்க எண்ணங்கள் அவங்களைப் பத்தி மாத்திரம் தான் இருக்கும். சுத்தியிருப்பவங்க ….. அப்படி யாரும் இருக்குறதாவே அவங்களுக்கு தெரியாத பருவம் இது. அவங்க செய்ற குறும்புகளை நாம் எடுத்து சொல்லச் சொல்ல, மேலும் நம்மள கவருற மாதிரி நடந்துக்குவாங்க
பெரிய குழந்தை: நீங்க நல்லா சீராட்டி வச்சிருக்கீங்கன்னு வச்சிக்கோங்க, அப்போ அவங்க சின்ன வயசுல இழந்த சுகமெல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும். நான் எப்படியிருக்கிறேன், குண்டா இருக்கிறேனோ, மெலியனுமோ அப்படி இப்படின்னு அவங்களைப் பத்தியே கேள்வி கேட்டுட்டு இருப்பாங்க. அவங்க நமக்கு செய்த காரியங்களை நாம பெருமையா சொன்னோமின்னு வச்சிக்கோங்க, அப்படியே பகல் கனவுக்குள்ள போயிருவாங்க

லாஜிக் பார்ட்டி: 9-11 வயதுக்குள்
சின்ன குழந்தை: லாஜிக்கா யோசிக்க ஆரம்பிப்பாங்க. பேச ஆரம்பிப்பாங்க. எல்லாம் அவங்களுக்கு புரிஞ்ச மாதிரி நடந்துப்பாங்க. ஒழுங்கு படுத்தி பார்க்கத் தெரியும் இந்த ஸ்டேஜில். இப்படித்தான் இருக்குதுன்னு அழுத்தமான நம்பிக்கை ஒன்னை வச்சிட்டு தான் எதையும் ஆராய்வாங்க. அவங்க நெனச்ச மாதிரியே வந்தால், அடுத்த யோசிப்புக்கு போயிருவாங்க.
பெரிய குழந்தை: சிறு வட்டத்துக்குள் இருந்து பழகியவர்களானால், இவங்க இப்படி தான் என்று தனக்குள் வரையறுத்துக் கொண்டு, வருத்தப் பட்டுட்டு இருப்பாங்க. எந்த பிரச்சனைக்கும் ஒரு எல்லைக் கோடு போட்டுருவாங்க. அந்த கோட்டை விட்டு வெளிக் கொணருவது கடினம். அப்படி அவங்க நெனச்ச மாதிரி அந்த ஆளோ, பொருளோ இல்லைன்னு வச்சிக்கோங்க, ரொம்ப பாராட்டாம அடுத்த கவலைக்குள்ள போயிருவாங்க

கேள்விகள் உலகம்: 11-15 வயதுக்குள்
சின்ன குழந்தை: மனசுக்குள்ள கேள்வி கேட்டு தேடும் வயது இது. இப்படின்னா எப்படி இருக்கும். அப்படின்னா எப்படியிருக்குமின்னு கேள்வி மேல கேள்வியா அவங்களையே கேட்டுப்பாங்க. இந்த ஸ்டெஜில அவங்களுக்கு தேவை என்னன்னா பெற்றோர், சுத்தியிருப்போர் வழிகாட்டுதல். இந்த வயசுல புசுக்குன்னு கோபம், அழுகை எல்லாம் வரும்
பெரிய குழந்தை: இவங்க மனசுல ஏதாவது ஒன்னு குடைந்து கொண்டே இருக்கும். நல்லதோ கெட்டதோ, ரொம்ப யோசிப்பாங்க. தீர்வு அவங்க கைல இல்லைனாலும், குழப்பத்தின் உச்சத்தில் தான் இருப்பாங்க. இப்படி செய்தா எப்படி, அப்படி செய்தா எப்படின்னு. அவங்க கருத்தை சில சமயங்களில் வாய் விட்டு வெளில சொல்லி, மகன், மருமகள், மகளிடம் திட்டு வாங்குவோர் அதிகம். என்ன சொன்னாலும் (நல்லதோ, கெட்டதோ) கண்ணீர் வந்துரும் இவங்களுக்கு. கோபத்தை சாப்பிட்டில் காட்டுவார்கள்

Moral of the story-ல்லாம் ஒன்னும் இல்லை. :-) இந்நன்னாளில், நாம நாட்டுக்கு என்ன செய்தோம், நாடு நமக்கு என்ன செய்ததுன்னு கேள்வியெல்லாம் கேட்காம, நம்மளால் முடிந்த ஒன்றை செய்வோம். அது நம் வீட்டில் ஆரம்பிக்கட்டுமே. நம்மூட்டு பெரியவங்களை குழந்தைகள் போல் நடத்துவோமே. அப்படி நடத்தும் போது, நீங்கள் அவர்களின் குழந்தை என்பதை மனதில் கொண்டால், கடிந்து நடக்கும் சந்தர்ப்பம் வந்தாலும், சுமூகமாக பேசும் திறன் வரும். நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்.

ஜெய்கிந்த்! இது முற்றுமல்ல... நீங்கள் தொடரவும்.

பின்குறிப்பு:
Mangai: http://manggai.blogspot.com/2006/10/growing-old.html
TheKa: http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_112975875971348634.html

Sunday, August 12, 2007

கலையாமல் கலைந்தேன் கண்மணி

கண்மணி யக்கோவ்...... இந்த பதிவு உங்களைப் பத்தியது இல்ல. பயப்பட வேண்டாம். இது ச்ச்சும்மா ச்ச்சும்மா...... :-)
நண்பன் ஒருவன் இதை வாசித்து விட்டு, இருவர் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போல் சொல்லிப் பார்த்தேன்; அருமையாக இருந்தது என்றான். ஏதோ அவன் போறாத காலம் நான் எழுதும் அனைத்தும் வாசிக்க வேண்டிய கட்டாயம். ஆனாப் பாவம் நீங்க. அவன் என்னடாவென்றால் ஞான் பெற்ற இன்பம், தமிழ்மணமும் பெறட்டும் என்கிறான். இதோ என் அருமைத் தோழனின் விருப்பத்திற்கிணங்க, உங்களையும் கஷ்டப் படுத்தியாற்று. ;-)


கலையாமல் கலைந்தேன்


கலையாத உன் தூக்கத்தில்
கலைந்த உன் குங்குமத்தில்
கலைந்தது என் மனம்
கலையாமல் என்னிடம்
வந்துவிடு என் கண்மணி
கலைந்து கிடக்கும் என்
மனம் புரிந்துவிடு கண்மணி

குவிந்து உன் உதடு
என்னைக் காதலிப்பதாய் முணுமுணுத்தது
அது கண்டு
என் மனம் விரிந்து குவிந்தது
என் தொண்டைக்குழியில் ஏறிய பரவசம்
வயிறு வரப் பாய்ந்தது
நாபி அடைந்த்து ஊணுடல் கலந்தது

கலையாது என் கை எடுத்து
உன் மேனி வைத்தாய்
என் மேனி கழன்றது
என்னுள் நடக்கும் மாற்றம்
அறிவாயா என் கண்மணி
கலையாமல் நீ நடத்தும் நாடகத்தில்
கலைந்து போனேன் கண்மணி

புரியுமா என் கண்மணி
கனவிலும் உனைப் பிரியேன் என்று!

-- காட்டாறு

Thursday, August 02, 2007

பழசு தான்... ஆனாலும் புதுசு

இந்த மாத போட்டிக்கு டாண்ணு வந்துடோம்மில்ல..... ராசாத்தீகளா.... காட்டாறுன்னு ஓடிப்புடாதீக..... பார்த்து, இரசித்து மகிழுங்க.

2 வருடங்களுக்கு முன்பு எடுத்தப் படங்கள் தான் இவை. ஆனாலும் போட்டிக்குப் புதுசு. ;-) குழந்தைகளை புகைப் படம் பிடிப்பது என்பது ஒரு தனி கலை தான். அவங்க பண்ற சேட்டைகளை நாம் இரசித்து கொண்டு இருக்கும் போது, புகைப் படம் எடுக்க மறந்து விடும். புகைப் படம் எடுக்க நாம் ரெடியா இருக்கும் போது, குழந்தைகள் நமக்கு அல்வா கொடுத்துருவாங்க. நான் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்த 4 புகைப்படங்கள். முதல் இரண்டும் போட்டிக்கு. மற்ற இரண்டும் எனக்காக. ;-)

(எல்லா படங்களும் Camera - Sony DSC F717 ஆல் எடுக்கப்பட்டவை. )




எங்க அத்தை வாங்கி வந்த சாக்லெட். ம்ம்ம்ம்ம்.......... நல்லா இருக்கு. எங்க அத்தை என்னை சாக்லேட் பேபின்னு கூப்புடுவாங்க. பேரு நல்லா இருக்கா?



அத்தை நல்லா சிரிப்பு காமிப்பாங்க. எப்படி சிரிக்கிறேன்னு பாத்தீங்களா? அத்தைக்கு போட்டோ எடுக்குறது புடிக்கும். ஒரு அத்தை சிரிப்பு காமிச்சாங்க, இன்னொரு அத்தை போட்டோ எடுத்தாங்க. அத்தைங்க ரெண்டு பேரும் வந்தாலே ஜாலி தான்.




இங்கே அழுறது பாட்டியா இல்லை பேத்தியா? அவங்க அழுததில் இன்னும் இரண்டு குழந்தைகள் அழுதது தான் ஹைலைட்டே.



அடொரேஷன் என்பது சிறு வயதிலே வந்துருது பாருங்க. அப்பாவை இந்த குழந்தை இரசிக்கிறது எவ்வளவு அழகா இருக்குதில்ல. அப்பாவை இரசித்த பாப்பாவையும், பாப்பாவை இரசித்த அப்பாவையும் இரசித்து அத்தை எடுத்த புகைப்படம் இது.