Thursday, March 13, 2008

பனிக் குவியலா உப்பளமா?


நண்பனின் பனிக்கால கனவு – முதல் அனுபவம்

இதுக்கு முன்ன முதல் அனுபவம் எழுதப் போக… ஆளாளுக்கு 'என்னவோன்னு நெனச்சி உள்ளே நுழஞ்சிட்டேன். ஏமாத்திப்பூட்டிகளேன்னு' கண்ணீர் (??) வடிச்சிட்டாக…. அதனால ராசாக்களே ராசாத்திகளே.. ஒரு நண்பனின் கனவு நனவான கதைய இங்கே சொல்லப் போறேன்.

நண்பனுக்கு பனிக் காலம் பற்றிக் கேட்பதே பெரும் பொழுது போக்கு. எப்போ எங்கூருல பனி பெய்தாலும் புகைப்படங்கள் எடுத்து அவரை கடுப்படிப்பது என் பொழுது போக்கு. ஒரு நாள் இல்ல ஒரு நாள் நானும் பனியில் நனைவேன்னு அடிக்கடி என்னை நற நறப்பார். அவர் சொன்ன மாதிரி அவருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் அமைந்தது. வியாபார விஷயமாக முதன் முதல் வெளிநாட்டுப் பயணம். அமெரிக்காவிற்கு. அவர் வரும் காலம் கொட்டும் பனிக்காலம். வந்தவர் இறங்கிய இடம் நியூயார்க். நாங்கள் இருக்கும் இடமோ பொல்லாத பனிக்குவியும் இடம். அவர் வந்த அன்று அங்கே மழை. இங்கே பனி. அவருக்கு பெரிய ஏமாற்றம். பனியில் நனையாது ஊர் திரும்பிவிடுவோமோ?ன்னு கலக்கம். அடுத்த இரண்டு நாட்கள் அவருக்கு வேலை வேலை. மூன்றாவது நாள் அதிகாலை 3 மணிக்கு ஃபோன். 'எலேய்.. சூப்பரா இருக்கு. பனி பெய்யுது.' அப்படின்னு. (சும்மா பனித் தூறலுக்கே இப்படி…..) நானிருக்கும் இடத்திலோ பனி கொட்டிக்கிடக்குது. அவரின் குதூகலமான மன நிலையை கலைக்க விரும்பாமல் 30 நிமிட கதையை(!) அர்த்த ராத்திரியில்(?) கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவர் எங்கள் ஊருக்கு வரும் நாள் வந்தது. அன்று பனிப் புயல் அறிவிப்பு. 8 இன்ஞ்க்கு குவியப் போகுதுன்னு பேச்சு. ஏற்கனவே குவிந்து உறைந்து கிடக்கும் பனி போதாதா? இதிலே நண்பர் வரும் நேரம் வரை ஒன்றும் இல்லை என வானிலை அறிவிப்பாளர் காலையில் அறிவித்து விட்டார். அப்பாடா… நல்ல வேளை. அல்லது விமானத்தை இரத்து செய்துவிடுவார்களே. எதிர்பார்த்த நேரத்திற்கு விமானம் வந்துவிட்டது. ஓடுகளத்தில் இருக்கும் போதே டாண்ணு ஒரு ஃபோன் வருது. என்னடான்னு கூட ஆரம்பிக்கல. அதுக்குள்ள.. மூச்சு தெறிச்சி விழுற மாதிரி.. 'எலேய்.. ஏன் சொல்லல.. உங்க ஊர்ல உப்பளம் கொட்டி வச்சிருக்குறன்னு…. அப்படியே நம்ம ஊரை கண்ணு முன்னால கொண்டு வந்துருச்சிப் போ' ன்னு.. ஒரே சந்தோசத் திக்கு முக்காடல். 'விமானத்துல இருந்தவாறே போட்டோ எடுத்து தள்ளிட்டன்ல…. யப்பப்பா… மூச்சு முட்டுதப்பா… விமான ஓடுகளத்துல கூட ஆங்காங்கே குவிச்சி வச்சிருக்காங்க பாரு'ன்னு… கட கடன்னு கொட்டித் தீர்த்துட்டார். 'சரியப்பா.. இறங்கி வர்ற வழியப்பாரு'ன்னு ஒரு வழியா பேசி முடிச்சாச்சி.
நான் நண்பனை வரவேற்க மூட்டைமுடிச்சுகள் எடுக்குமிடத்தில் காத்திருந்தேன். ஓடி வந்து தழுவியவாறு 'ஏம்புள்ள சொல்லல. அப்படியே நம்மூரு உப்பளம் தான்'னு திரும்பவும் ஆரம்பமாச்சி அவரின் ஆனந்த புலம்பல். சரிதான்… இன்னக்கி இது முடியாது போலவேன்னு நெனச்சிட்டு….. 'சரியப்பா.. நடையக் கட்டு'ன்னு தள்ளிட்டுப் போக வேண்டியதா போச்சு. மூட்டைய எடுத்துட்டு வெளில வந்தா செம குளிரு. இவ்ளோ நேரம் விமான நிலையத்துள்ளே இருந்ததால் குளிர் பத்தி நெனச்சிப் பார்த்திருக்க மாட்டார் போல. 'அடிப்பாவி… இவ்ளோ குளிருமா.. இப்படியா? இந்த ஊர்ல நீ கண்டிப்பா இருக்க தான் செய்யனுமா'ன்னு… ஆரம்பமாகியது அடுத்தடுத்து கேள்விகள்.

ஒரு வழியா கார்ல ஏறியாச்சு. அடுத்த கேள்வியும் வந்தது. 1 சாக்லேட் கொடுத்த குழந்தையிடம் 5 சாக்லேட் கொடுத்தால். இன்னும் தருவாங்களான்னு பார்க்குமே. அது போல தான் இவரும். 'என்ன புள்ள….. இன்னக்கி பனி பெய்யுமின்னு சொன்ன. இன்னும் காணோமி'ன்னு கேள்வி. 'அடப் பாவி. இப்போ தானே வந்திருக்க'ன்னு சொன்னா.. ஒரு நமுட்டு சிரிப்பு. 5 மைல் வந்திருப்போம். பனி கொட்டு கொட்டுன்னு கொட்ட ஆரம்பிக்குது. 40 நிமிஷத்துல போக வேண்டிய வீட்டுக்கு 2 மணி நேரத்துல வந்து சேர்ந்தோம். அவருக்கு பனி மழையை பார்த்ததும் ஏக சந்தோஷம். புகைப் படம் எடுத்து தள்ளிட்டாரு, என்னென்னவோ பேசிட்டே. குழந்தையின் சந்தோஷத்தோட, கார் போற ஸ்பீடுக்கு இறங்கி நடந்துறலாமின்னு காமெண்ட் வேற.

மறுநாள் கொட்டும் பனியை வீட்டினுள் இருந்தவாறே டீ, பஜ்ஜியுடன் இரசித்தோம். அன்று பனி பெய்வது நிற்கவே, கையில்லா சட்டையுடன், உற்சாகமாய் காமிராவை என் கையில் கொடுத்தவர், க்ளிக்கித் தள்ளு பார்ப்போம் எனக் கூறி அவ்வளவு குளிரிலும், ஆட்டம் போட வெளியே (வீட்டின் பின்புறம்) கிளம்பிவிட்டார். நானோ நல்ல பிள்ளையாக 4 லேயரில் உடை உடுத்தி, குல்லா போட்டு (தலைக்கு தாம்ப்பா), உல்லன் சாக்ஸும், ஸ்னோ பூட் போட்டு, ஜாக்கெட் சகிதமாய் வெளியே வந்தால், வீட்டின் பின்னால் அழகான வெள்ளைத்தாளென இருந்த பனி இப்போது கசங்கிய சகதியாய் காட்சியளித்தது அவரின் குதியாட்டத்தால். அவரின் கொண்டாட்டம் எங்களையும் தொற்றிக் கொள்ள, எல்லோரும் சேர்ந்து ஆட்டம் தான். :-)

ஒரு வழியா அவர் இருந்த 5 நாட்களும் புதுப்புது இடங்களா போய் பனி மலையை (குவித்து வைத்த பனியைத் தான்) விதவிதமா கிளிக்கித் தள்ளிட்டார். நண்பருக்கு கனவு நனவான சந்தோஷம். நமக்கோ சொல் பேச்சுக் கேட்டாத ஒரு குழந்தையை பத்தி மேய்ச்ச களைப்பான சந்தோஷம். நண்பரின் குதூகலம் எங்களையும் தொற்றிக் கொண்டது என்பதை கூறவும் வேண்டுமா?

பின்குறிப்பு:
யாத்ரீகன் கூல் பதிவில்(http://yaathirigan.blogspot.com/2008/03/coooool.html), அவருடைய புகைப் படம் ஒன்றைக் காணப் போய், இந்த பதிவு உருவானது. நன்றி யாத்ரீகன்.

Monday, March 10, 2008

சிலுசிலுப்பு குச்சி

சிலுசிலுப்பு குச்சி

கொண்டை சேவல் கூவுமுன்
குடுமி முடி தான் முடிந்து
பலாப்பட்டி தலை சுமந்து
பள்ளி சேர்த்த மக்களை
காணச் சென்றார்
கோவணாண்டி தாத்தா

ஒரு பையில் முறுக்கும், கொழுக்கட்டையுமாய்
மறு பையில் சீடை, அதிரசமுமாய்
புதுத் துணி எடுத்து
பட்டணத்து விடுதிக்கு
ஆசையுடன் வழி நடந்தார்
காட்டு வழிப் பாதையிலே

ஒத்தையடிப் பாதையிலே
ஊர் ஒன்று தாண்டிடவே
கிண்கிணி மணியோசை
திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தார்
கண்ட காட்சிக்கு
அதிசயித்து இலயித்திருந்தார்

பச்ச புள்ளக ஓடிவர
கூவி அழைத்து காசு வாங்கி
ஜாலம் செய்து
வித்தை காட்டி
குழந்தைகளை மகிழ்வித்தான்
ஐஸ் வண்டிக்காரன்

வியப்பு மேலிடவே
புதுப் பட்சணமாய்
தோன்றிடவே
ஏதென அறிய
தயக்கமாய் பக்கம் சென்றார்
பட்டிக்காட்டு தாத்தா

ஓரக் கண் பார்வையுடன்
பொட்டி அதனை அவன் திறக்க
சிலுசிலுப்பாய் வெண்புகை
பதறி ஓரடி
பின்வாங்கினார்
எங்க தங்க தாத்தா

விடுதி சென்ற மக்களுக்கு
புதுப் பட்சணம் காண்பிக்க
காசு கொடுத்து இரெண்டு வாங்கி
முண்டாசில் முடிந்து
வீறுநடை நடந்தார்
மிதப்புடனே

பெருமிதமாய் விடுதி சென்று
சிலுசிலு நீர் காதோடு வழிய
ஓடி வந்த மக்களை அள்ளியபடி
அணைத்து முத்தமிட்டு
முண்டாசு அவிழ்த்தார்
மக்கள் முன்

ரெண்டு, குச்சி மட்டும் அதிலிருக்க
சிலுசிலுப்பும் அடங்கியிருக்க
திருதிருவென புரியாது
விழி தாழ்த்தி
அயர்ந்தாரே
அப்பாவி தாத்தா!

பின்குறிப்பு:
இது உண்மை சம்பவம். அம்மாவும், மாமாவும் பக்கத்து ஊரில் படிக்க அனுப்பி வைத்த தாத்தா, ஒரு முறை அவர்களை காண வரும் போது நடந்த கதை இது. அம்மா கதை சொல்ல, அதன் வடிவம் தான் இங்கே. இது போல சம்பவங்கள் உங்களுக்கும் நடந்திருக்கும். பகிர்ந்து கொள்ளலாமே; பதிவாகவோ. பின்னூட்டமாகவோ.)

Sunday, March 09, 2008

நாங்களும் சின்னவங்களாயிட்டோம்

சின்ன புள்ளையா இருக்குறச்சே படிச்ச பாடமெல்லாம் மறக்காம இருக்கனுமின்னு டீச்சர் வீட்டுப்பாடம் கொடுத்தாங்க. முதல் பாட்டு ஞாபகத்துக்கு வர தான் மூளைய கசக்க வேண்டியதா இருந்துச்சி. அப்புறமா எல்லாரும் வரிசை கட்டி நிக்குறாங்க. சரியா செய்திருக்கேனான்னு பார்த்து சொல்லுங்கப்பா. சரியா இல்லைன்னாலும் ‘பார்த்து’ மார்க் போடுங்க. வயசான காலத்துல இப்பிடி முதியோர் கல்வி கற்க வச்சிட்டீங்களே. :-) அசை போட நல்லா தான் இருந்தது.





கண்ணே மணியே முத்தம் தா
கட்டிக்கரும்பே முத்தம் தா
வண்ணக் கிளியே முத்தம் தான்
வாசக் கொழுந்தே முத்தம் தா
மானே தேனே முத்தம் தா
மடியில் வந்து முத்தம் தா




ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரித் தண்ணி கலக்கும் ஆனை

(இதுக்கு மேல தெரியல)



தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று




கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு
பாடும் குயிலே கைவீசு
பைய போகலாம் கைவீசு
பழத்தை வாங்கலாம் கைவீசு
பகிர்ந்தே தின்னலாம் கைவீசு






காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா
கிளியே கிளியே பிள்ளைக்கு பால் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா





பின் குறிப்பு:

இந்த பதிவு பள்ளிக்கூடப் பாட்டுப் போடச் சொன்ன எங்கள் கண்மணியக்காவுக்காக