Wednesday, April 11, 2007

அழகுச் சங்கிலியின் அழகே அழகு

முத்துலெட்சுமி அழகைப் பற்றி அழகா சொல்லிட்டு, என்னையும் சேர்த்து விட்டாங்க இந்த விளையாட்டுல. அழகுன்னா என்ன? என்னால சரியாக விவரிக்க முடியுமான்னு தெரியல. சிலருக்கு வெளிச்சம் அழகா இருக்கும்; வேறு சிலருக்கு இருட்டு அழகா இருக்கும். நிலவைக் கண்டு வியந்துருகும் நம் மனம், சூரியனையும் விட்டு வைக்காது. "தேடலின் புரிதலில் என்னை அழகானவள் என்றது என் மனம்." ஆமாங்க எதிலும் அழகு காணும் நம் மனம் ரொம்ப அழகுங்க. நம்ம மனசு ரொம்ப சந்தோசத்துல துள்ளுற ஒவ்வொரு கணமும் அழகுன்னு தோணுது. அந்த நிமிஷத்துல நம்மை நாமே மறந்து போயிருவோம் பாருங்க..... JK இத ரொம்ப அழகா சொல்லியிருப்பார்:

"What takes place when you look at something which is actually marvellously beautiful: a statue, a poem, a lily in the pond, or a well-kept lawn? At that moment, the very majesty of a mountain makes you forget yourself. Have you ever been in that position?
If you have, you have seen that then you don’t exist, only that grandeur exists. But a few seconds later or a minute later, the whole cycle begins, the confusion, the chatter. So beauty is, where you are not. It is a tragedy if you don’t see this. Truth is, where you are not. Beauty is, love is, where you are not."

அப்படின்னா, அழகுன்னு சொன்னா.... உணர முடியும்; எழுத முடியுமா? தெரியல. முயற்சி செய்து பார்க்கலாம். என்ன சொல்றீங்க நீங்க?

1) வெட்கம்
வெட்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதனால பொதுவா சொல்லப் போகிறேன். வெட்கம் வரும் போது உள்ள அழகைப் பாத்தீங்கன்னா..... பார்த்துட்டே இருக்கலாம். நெசமாத்தான் சொல்லுறேன். அதனால நான் வெட்கத்தை பல பருவங்களாக பிரித்து மேயப் போகிறேன். முதல் பருவம், மழலைப் பருவம். வெட்கப் படுற குழந்தைய பார்த்து நம்ம மனம் ஆனந்த கூத்தாடும் பாத்தீங்களா? அம்மா சேல பின்னால நின்னுட்டு, ஒத்த கண்ணால பாத்துட்டு,..... அழகே அழகு. இரண்டாம் பருவம், வாலிபம். நிறைய குறும்பு; கொஞ்சம் லாஜிக். இந்த பருவத்துல வெட்கம் என்பது தம்மை புகழும் போது மட்டும் வரும். அத கோபமா வெளிப்படுத்துவாங்க பாருங்க.... ரொம்ப அழகா இருக்கும். நீங்க அந்த சமயத்தில சிரிச்சீங்கன்னா..... அவ்வளவு தான். சிரிக்காம, அவங்க கோபத்தை இரசிச்சீங்கன்னு வச்சிக்கோங்க..... வெட்கத்தில் ஓடிப் போயிருவாங்க. மூன்றாம் பருவம் மண வாழ்வின் முதல் படி. அது என்னவோ தெரியலைங்க.... இந்த பருவத்துல எதற்கெடுத்தாலும் வெட்கம் வரும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும். என்ன சொன்னாலும் வெட்கம் வரும். இந்த பருவத்தில் இவர்களைச் சீண்டி அழகு (வேடிக்கை) பார்ப்பவர்கள் ஏராளம். நான்காம் பருவம், முதுமை. தாத்தாவிடம் போய் பாட்டியைப் பற்றியும், பாட்டியிடம் போய் தாத்தாவைப் பற்றியும் கேட்டுப் பாருங்கள். அதுவும் அவர்களின் முதல் சந்திப்பு பற்றிக் கேட்டால், ஒருவரை ஒருவர் இரசித்துக் கொண்டே கதை சொல்லும் தருணங்களில் எங்கேயிருந்து அந்த வெட்கம் வருமோ தெரியாது; தாத்தா, கண் இடுக்கி சிரிப்பார் - வெட்கத்துடன். பாட்டி, இந்த கிழத்துக்கு வேலையில்லன்னு ஒரு லுக் விட்டுடே வெட்கத்துடன் அதட்டுவார். இதை (அவர்கள் வெட்கப்படுவதை) அனுபவித்தவர்களுக்குத் தெரியும்; அத்துனை அழகு முதுமையில் வெட்கம்.

2) பொய்க் (?) காதல்
எங்கள் குடும்பத்தில், என் வயதொத்தவர்கள் நெறையா பேர் ஆண்கள். 4 அண்ணன்கள், 3 தம்பிகள் எனக்கு. இது போதாதுன்னு அவர்களுடைய நண்பர்களுக்கும் நாம தான் அக்கா அல்லது தங்கை. இவங்களுக்கு தூது போவதற்குன்னு பிறந்தவர்கள் நானும் என் அக்காவும். அதனால என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப அருமையான நிகழ்வுகள் ஏராளம். ஒவ்வொன்னும் ஒரு அழகு தான். இதுல எனக்கு ரொம்ப பிடித்தது, தூது போவது. படத்துல பாத்திருப்பீங்க. அதே நம் வாழ்விலும் நடந்திருந்தால்...... very interesting இல்ல..... அந்த பொண்ணு திரும்ப பதில் சொல்லும் வரைக்கும், வீட்டுக்குள்ள குட்டி போட்ட பூனையாட்டம், கால் ரேகை தேய்ந்து போகிற மாதிரி, குறுக்கும் நெடுக்குமா நடை பயில்வாங்க பாருங்க..... அப்போ, அவங்க முகத்துல உள்ள கலவையான எக்ஸ்பிரஷன் ஒரு தனி அழகு. ஆயிரம் முறை அதே கேள்விக்கு வேற வேற பதில் சொல்லனும். அவங்க அஷ்ட கோணலா முகத்த வச்சிட்டு ஒரே யோசனையா வளைய வருவாங்க பாருங்க..... அருமையான அழகு. (இதுல நமக்கு தலையில குட்டும் கிடைக்கும். அது வேற கத.)

3) பாசம்
நான் ஊரிலிருக்கும் போது ஒவ்வொரு சனிக் கிழமையும், சிறுவர் முகாமிற்கும், ஒவ்வொரு ஞாயிறன்று முதியவர் முகாமிற்கும் செல்வது வழக்கம். இப்பொ... அது முடியாதல்லவா. அதனால, ஊருக்கு செல்லும் போது தவறாமல் அவர்களுடன் ஒரு நாள் செலவிடுவேன். அவர்கள் என் மேல் கொண்டுள்ள பாசம் அளப்பரிது. அவர்கள் கண்களில் உள்ள நீர் சொல்லும் அந்த பாசத்தை அழகன்றி வேறேன்பது?

4) தாய்மை
தாய்மையடைவதை நான் இங்கு குறிப்பிடவில்லை. தாய்மையுணர்வை குறிப்பிடுகிறேன். எல்லோருக்குள்ளும் தாய்மை உணர்வு இருக்கும். இது இரு பாலாருக்கும் பொருந்தும். எனக்கு தாய்மையுணர்வு கொஞ்சம் அதிகம் என்று நான் சிறுவயதில் இருக்கும் போதே பெரியவர்கள் சொல்வர். இதை அழகு என்று மருகியவர்களும் உண்டு. வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் என் குழந்தையாக்கிவிடுவேன். நிறைய கதை உண்டு இதன் பின்னால். உதாரணத்திற்கு ஒன்று: என் அம்மா இன்றும் என்னிடம் அவர்கள் தாயிடம் இருந்தது போல் தான் இருப்பார்கள். பாதி வேளையில் யார் தாய் யார் சேய் என்று பக்கத்திலிருக்கும் பலருக்கும் சந்தேகம் வந்துவிடும். எங்கள் அந்நியோன்னியத்தை கிண்டல் பண்ணியவர்கள் பல பேர் உண்டு. எங்க அம்மா இப்பவும் சொல்லுவாங்க. அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தால், உனக்கு நான் மகளாக வேண்டும்ன்னு.

5) நட்பு
இது அழகு என்று நான் சொல்லித்தெரிவதில்லை. ஆயினும் இதை சொல்லாவிட்டால் அழகு மதிப்பற்றதாகப் போய்விடும். கண்டு நட்பு; காணாத நட்பு என்று பல உண்டு. ஆனாலும், நட்பு நட்புதான். அழகோ அழகுதான். நானிங்கு சொல்லப் போவது என் முதல் நட்பு. எனக்கு 2-ஆம் வகுப்பில் கிடைத்த தோழி இன்றும் எனக்கு நெருக்கமானவள். என் வீடு பள்ளிக்கு எதிர். அவளோ ரிக்ஷாவில் வருபவள். என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். நட்பு ஏற்பட ஒரு பென்சில், ரப்பர் போதுமே. அப்புறம் என்ன? இன்று வரை மாறா நேசம். நிறைய பேர் சொல்லலாம். ஆனால், முதல் நட்பின் அழகுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

6) இயற்கை
இந்த அழகை வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது. குழந்தையும் இயற்கையும் ஒன்று. குழந்தையைக் கண்டு குதுகலிக்கும் அதே மனம் தான் இயற்கையைக் கண்டும் குதுகலிக்கும். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகம் இருக்காது. குளமோ, குட்டையோ; இரவோ, பகலோ; இளமையோ, முதுமையோ; பட்ட மரமோ, பழுத்த மரமோ; இலையோ, சருகோ; இயற்கையோ, செயற்கையோ; அப்படியே ஒன்றி போய் விடுவேன். எல்லாமே அழகா தோணும். எல்லாமே நானாகிவிடுவேன். எல்லாருமாகவும் நானாகிவிடுவேன்.

அழகை வரிசைப் படுத்த முடியாது. அதனால எழுதி வைத்து பதிவிடாமல், பதிவுல நேரடியா எழுதிட்டேன். தவறி இருந்தால்..... அழகுன்னு விட்டுருங்க. அழகா இருந்தா இரசிச்சிக்கோங்க.

என்னை எழுத அழைத்த முத்துலெட்சுமிக்கு நன்றி! முன்னால நிக்கிற மூணு பேரு வாங்கப்பா
1) பின்னூட்டம் மட்டும் இடும் அருமை நண்பர் சேதுக்கரசி (??) http://kuttapusky.blogspot.com/
2) தில்லியைக் கலக்கும் தோழி துளசி கோபால் (http://thulasidhalam.blogspot.com/)
3) தில்லானா மங்கை (http://manggai.blogspot.com/)

--- முதல் இருவருக்கும் பதிலாக -----
1) வரவனையான் (http://kuttapusky.blogspot.com)
2) ஆன்லைன் ஆவி (http://avigalulagam.blogspot.com)

38 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

காட்டாறு, உங்க பேர் மாதிரி இல்லாம அழகா அமைதியா ஓடற பேராறு மாதிரி இருந்தது உங்க அழகுப் பதிவு.

உங்க அம்மாவோட இருக்கும் அந்நியோன்னியம் படிக்கும் போதே பொறாமையா இருக்கு.

அப்புறம் துளசி டீச்சரை நானே கூப்பிட்டாச்சு. அதனால அவங்க இடத்துக்கு வேற ஆள் கூப்பிடுங்க.

சேதுக்கரசி என்ன சொல்லியும் எழுத மாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கறாங்க. நீங்க சொல்லி அவங்க எழுத ஆரம்பிச்சா, உங்களுக்கு ஒரு சாக்லேட் பார்ஸேல்ல்ல்ல்ல்! :))

said...

வெட்கத்தை வெட்கம் இல்லாமல் சொல்லிருக்கீங்க! ;)
ரொம்ப அழகாய் இரசித்து எழுதிருக்கீங்க! அது அழகு!!

/எங்க அம்மா இப்பவும் சொல்லுவாங்க. அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தால், உனக்கு நான் மகளாக வேண்டும்ன்னு.
/
யார் கொடுத்து வைத்தவர்கள்? (... இருவரும்தான் ...!)

said...

காட்டாறு,

அட்டகாசமான அழகு பதிவுங்க.....

வெட்கம்,பாசம்,தாய்மைன்னு கலக்கிட்டிங்க :)

அப்புறம் அந்த பொய் காதலிலே எனக்கும் சேம் பிளட்....

அவனுகளுக்கு தூது எல்லாம் போய்தான் அந்த மண்ணாங்கட்டியே நமக்கு வரவே இல்லே ... :)

said...

//காட்டாறு, உங்க பேர் மாதிரி இல்லாம அழகா அமைதியா ஓடற பேராறு மாதிரி இருந்தது உங்க அழகுப் பதிவு.//
பாராட்டுக்கு நன்றி கொத்தனாரே! 4 நாள் ஊர் சுத்திட்டு வந்ததும் பார்த்தா, முத்துலெட்சுமி வம்புல மாட்டிவிட்டுட்டாங்க. சரி மத்தவங்க எழுதுனத வாசிச்சா, நம்ம மனசுல ஓடுறத எழுத முடியாதுன்னு.... நேரடியா பதிஞ்சதுல, கொஞ்சம் உதறல் தான். அது கூட அழகா இருக்குதுன்னு நெனச்சிட்டு எழுதிட்டேன்.

//அப்புறம் துளசி டீச்சரை நானே கூப்பிட்டாச்சு. அதனால அவங்க இடத்துக்கு வேற ஆள் கூப்பிடுங்க. //
ஆளுக்கா பஞ்சம். நம்ம தென்றல வந்து அழக தழுவிட்டு போகச் சொல்ல வேண்டியது தான்.

//சேதுக்கரசி என்ன சொல்லியும் எழுத மாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கறாங்க. நீங்க சொல்லி அவங்க எழுத ஆரம்பிச்சா, உங்களுக்கு ஒரு சாக்லேட் பார்ஸேல்ல்ல்ல்ல்! :))
//
சாக்லேட் கட்டாயம்ன்னா..... சேதுக்கரசியார எழுத வைக்க முயற்சி பண்ணுறேன்.

said...

பாரட்டுக்கு நன்றி தென்றல்.

//யார் கொடுத்து வைத்தவர்கள்? (... இருவரும்தான் ...!)
//
நான் தான் ரொம்ப கொடுத்து வைத்தவள். மகளை தாயா சேவிக்கிற தாய் கிடைத்ததற்க்கு. என்ன சொல்றீங்க?

said...

ராம், உங்க மறுமொழி வாசித்து சிரித்து விட்டேன்.

//அப்புறம் அந்த பொய் காதலிலே எனக்கும் சேம் பிளட்....

அவனுகளுக்கு தூது எல்லாம் போய்தான் அந்த மண்ணாங்கட்டியே நமக்கு வரவே இல்லே ... :) //
நான் கூட ரொம்ப லொள்ளு பண்ணியிருக்கிறேன். நோகடிச்சிருக்கிறென் என்றும் சொல்லலாம். உண்மை என்னன்னா..... ரொம்ப ரொம்ப ரசிச்சிருக்கிறேன். நீங்களும் கண்டிப்பா ரசிச்சிருப்பீங்க. கிண்டல் பண்ணிருப்பீங்க.. இல்லையா?

said...

தமிழ்நதி தென்றலை கூப்பிட்டாச்சே!

அது என்னங்க அழகுகள் ஆறு, காட்டாறு, தமிழ்நதி, தென்றல் அப்படின்னு சூப்பர் கூட்டணியா இருக்கு?

சாக்லேட் ஒண்ணு இல்லை ரெண்டு. நானாச்சு ஏற்பாடு பண்ணறேன். நீங்க எழுத வையுங்க. (வையச் சொன்னேன்னு நினைச்சு திட்டாதீங்க பாவம்.)

said...

//தமிழ்நதி தென்றலை கூப்பிட்டாச்சே! //
ஐயையோ! நான் ரொம்ப பின் தங்கி இருக்கிறேன் போலவே. நாளு நாள் ஊர்ல இல்லன்னா.... இப்பிடி கலக்குறீங்க. சரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..... ஒரு மாறுதலுக்கு ஆன்லைன் ஆவிய(http://avigalulagam.blogspot.com/) கூப்பிடுவோம். அங்கேயும் அழகு கொட்டிக் கிடக்கத்தான் செய்யும்.

//அது என்னங்க அழகுகள் ஆறு, காட்டாறு, தமிழ்நதி, தென்றல் அப்படின்னு சூப்பர் கூட்டணியா இருக்கு?
//

நமக்கு உதிக்காம போச்சே இந்த ஐடியா.... அழகா தலைப்பு வைத்திருக்கலாமே.... அழகு ஆறு காணப் புறப்படும் காட்டாறு. கொஞ்சம் மிஸ் ஆயிருச்சி.

//(வையச் சொன்னேன்னு நினைச்சு திட்டாதீங்க பாவம்.) //
வைய மாட்டேன். நல்லா சவுண்டு விடுவேன்.

said...

அமைதியான ஓடற பேராறு.//

ரொம்ப அழகா சொல்லிட்டாரு கொத்தனாரு.

காதில சொல்ற கவிதையைவிட மனசில பதியறமாதிரி கட்டுரை எழுதிட்டீங்க நீங்களும்.உங்க அம்மாக்கு என் வாழ்த்துகள். இந்த
மாதிரி எழுதத் தெரிஞ்ச பெண்ணைப் பெற்றதற்கு.
அம்மாக்களுக்கு நன்றிகள் உடனே உடனே சொல்லிடணும்.
தினம் கூட சொல்லலாம்.:-)

said...

யம்மாடி இது என்ன காட்டாறு மாதிரி நிஜமாவே அழகு அள்ளிக்கிட்டு
ஓடுது.

அம்மா- பொண்ணு அழகு மனசை அப்படியே எங்கியோ கொண்டு போயிருச்சு.

தாய்மை உணர்வுலே எல்லாரும் குழந்தைதான் எனக்கு, நம்மூட்டு சாமிகள் உள்பட:-)

said...

//உங்க அம்மாக்கு என் வாழ்த்துகள். இந்த மாதிரி எழுதத் தெரிஞ்ச பெண்ணைப் பெற்றதற்கு.
அம்மாக்களுக்கு நன்றிகள் உடனே உடனே சொல்லிடணும்.
தினம் கூட சொல்லலாம்.:-)
//
கண்டிப்பா சொல்லிடலாம் நன்றியை. மனசுல உள்ளது தானங்களே எழுத்தா வருது. அம்மா எப்பவும் எங்க கிட்ட சொல்லுற வரிகள் இது "சான்றோன் எனக் கேட்டத்தாய்". அதுக்கு ஏத்த மாதிரி அவங்க பிள்ளைங்க அமைந்தது அவங்க வளர்த்த விதம்ன்னு கூட சொல்லலாம்

said...

//யம்மாடி இது என்ன காட்டாறு மாதிரி நிஜமாவே அழகு அள்ளிக்கிட்டு
ஓடுது.
அம்மா- பொண்ணு அழகு மனசை அப்படியே எங்கியோ கொண்டு போயிருச்சு.//
அழகை ரசித்ததற்கு நன்றி துளசி!

//தாய்மை உணர்வுலே எல்லாரும் குழந்தைதான் எனக்கு, நம்மூட்டு சாமிகள் உள்பட:-) //
அப்போ உங்களுக்கு கண்டிப்பா நான் சொன்ன அழகு நல்லாவே புரிந்திருக்கும். உங்கள் தோழமை கிடைத்தற்கு நன்றி! ;-(0)

said...

மிக மிக வித்தியாசமாக அழுகுகளை பட்டியல் போட்டு இருக்கிறீர்கள்.

said...

அழகினை பற்றி அழகாக பதிவு செய்து அழகாக என்னை அழகான பின்பதிவு இட வைத்திருக்கிறீர்கள்!;))(நானும் கொஞச முயற்சி செய்றேனே:)!!)
பெயருக்கு ஏற்ற மாதிரி உங்க எழுத்தும் இயற்கையான ஒரு நடையோடு ரசிக்கும் படியா இருக்கு!! வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்க!!

அருண்

said...

//மிக மிக வித்தியாசமாக அழுகுகளை பட்டியல் போட்டு இருக்கிறீர்கள். //
நன்றி வடுவூர் குமார். எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?

//அழகினை பற்றி அழகாக பதிவு செய்து அழகாக என்னை அழகான பின்பதிவு இட வைத்திருக்கிறீர்கள்!;))(நானும் கொஞச முயற்சி செய்றேனே:)!!)//
அருண், முயற்சியில் வெற்றி!

//பெயருக்கு ஏற்ற மாதிரி உங்க எழுத்தும் இயற்கையான ஒரு நடையோடு ரசிக்கும் படியா இருக்கு!! வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்க!! //
பாராட்டுக்கு நன்றி அருண்!

said...

அட ஜே கே ஆளா நீங்க!!


/அது என்னங்க அழகுகள் ஆறு, காட்டாறு, தமிழ்நதி, தென்றல் அப்படின்னு சூப்பர் கூட்டணியா இருக்கு? /

கொத்ஸ் இதெல்லாம் நம்ம வேல..எல்லாரையும் விரட்டி விரட்டி எழுத வைக்கிறனாக்கும்..நியாயமா சாக்லேட் நீங்க அனுப்ப வேண்டியது துபாய்க்கு..:)

said...

காட்டாறு புரண்டு சீறி வருவதே ஒரு அழகுதான்!

அழகினைச் சொன்ன விதம் அழகாக இருந்தது.

said...

நல்லா எழுதி இருக்கிங்க காட்டாறு

வெட்கம் ரொம்ப அழகான உணர்வு நல்லா சொல்லியிருந்திங்க

தாய்மை உணர்வு ..சொல்லவே வேணாம் :)

நல்ல பதிவுங்க

said...

அருமையா எழுதியிருக்கீங்க... அழகை ரசித்தேன் :))

said...

நல்லாருக்கு காட்டாறு ...
ரசிச்சுப் படிச்சேன். மங்கை என்கிட்ட வேணாமேன்னு சொல்லும்போது சொன்னேன்...பாருங்க வேறயாரச்சும் கூப்பிடாமலா ப்போவாங்க...பாத்துக்கலாம்ன்னு கூப்பிட்டுட்டீங்க.

said...

ஆஹா..இது என்ன tit for tat ஆ

ஹ்ம்ம்ம் தில்லானா மோனாம்பாள் படத்தில மனோரமா சொல்ர வசனம் தான் நியாபகம் வருது...
'நீங்களும் வாசிச்சு நானும் வாசிக்கவாஆஆஆ'

said...

இதுல பட்டம் வேற... ராசாத்தி.. உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை..

said...

//அட ஜே கே ஆளா நீங்க!!//
நான் சாதாரண ஆளுங்க! ;-)

//கொத்ஸ் இதெல்லாம் நம்ம வேல..எல்லாரையும் விரட்டி விரட்டி எழுத வைக்கிறனாக்கும்//
அய்யனாரே.... சாக்லேட் சேதுக்கரசிய எழுத வச்சா.... ஆனாலும் அஸ்கு புஸ்கு... எனக்குத் தான் சாக்லேட்...
கொத்தனாரே, கட்சி மாறிராதீங்க!

said...

VSK, ஜி, முத்துலெட்சுமி உங்க பாராட்டுகளுக்கு நன்றிங்கோவ்!

//மங்கை என்கிட்ட வேணாமேன்னு சொல்லும்போதுன்னேன்...பாருங்க வேறயாரச்சும் கூப்பிடாமலா ப்போவாங்க...பாத்துக்கலாம்ன்னு கூப்பிட்டுட்டீங்க. //
சும்மா வேணாமுன்னு சொல்லுவாங்க..... நீங்க சொல்லி வரலன்னது, எனக்கு டெலிப்பதில்ல கேட்டுட்டோ என்னவோ! :)

said...

//ஆஹா..இது என்ன tit for tat ஆ//
அப்படின்னா என்னங்கோவ்?

//ஹ்ம்ம்ம் தில்லானா மோனாம்பாள் படத்தில மனோரமா சொல்ர வசனம் தான் நியாபகம் வருது...
'நீங்களும் வாசிச்சு நானும் வாசிக்கவாஆஆஆ' //
உங்க நாயணத்துல தான் இந்த சத்தம் வருதா.... எங்க நாயனத்துலேயும் சத்தம் வருமா.... ஆச்சி ஆச்சி தானுங்களே! இது உங்களுக்கு வச்ச பிட்டுன்னு நினைக்க வேண்டாம். ;-)

//இதுல பட்டம் வேற... ராசாத்தி.. உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை.. //

தங்கோம்... தகிரியமா எழுதுடா.... ;-) உனக்கா எழுத சொல்லிக் குடுக்கனும்?

said...

/ஆளுக்கா பஞ்சம். நம்ம தென்றல வந்து அழக தழுவிட்டு போகச் சொல்ல வேண்டியது தான்.
/
நன்றி, காட்டாறு!

அது என்னங்க.. உங்க பின்னூட்டத்தில எல்லாரும் கவிதையா 'பின்றாங்க'!

said...

மொக்கைப் பதிவு போட்டு என்னை இங்கே வரவழைச்சதுக்கு நன்றி. ஆமா, அந்த மொக்கையையும் வாசிக்காம விட்ருந்தேன்னா நீங்க என்னை அழைச்சீங்கன்னு எனக்கெப்படித் தெரிஞ்சிருக்கும்? ;-)

இப்படித்தான்.. கைப்புள்ள கைப்புள்ள-ன்னு ஒருத்தர் இருக்கார் தெரியுமா? கலக்கலா எழுதுவார். போன வருசம் என்னை 6 விளையாட்டுக்குக் கூப்பிட்டார். ஆளை விடுங்கப்பாண்னு அன்னிக்கே ஃபிளைட்டு புடிச்சு இந்தியாவுக்குப் போயிட்டேன். இன்னிக்கு நீங்க இந்த விளையாட்டுக்கு என்னையக் கூப்பிட்டிருக்கீங்க. இப்ப எந்த ஊருக்குப் போவேனாம்???

அப்புறம்.. "அழகு", "வியர்டு", இப்படியெல்லாம் பதிவுத் தலைப்பில் வந்தா அதைப் படிக்கிறதில்லைன்னு வச்சிருக்கேன். ஆறு விளையாட்டு, வியர்டு விளையாட்டு, அது இதுன்னு பதிவுகளில் தடுக்கி விழுந்தா வர்ற தொடர் விளையாட்டெல்லாம் படிக்கிறதில்ல.. அதையெல்லாம் விடாம படிச்சிட்டிருந்தா மனுசனுக்கு வேற எதுக்கும் (பாத்ரூம் போகக் கூட!) நேரமிருக்காது போலிருக்கே? ;-)

காட்டாறு & கொத்ஸ் கூட்டுமுயற்சிக்கு வாழ்த்துக்கள். கொத்ஸ் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார் நம்மளப் பத்தி. இப்போதைக்கு மௌனம் கலைக்கிறதா இல்லீங்கோவ். மண்ணிக்கவும். (மூணு சுழி "ண்ணி" போட்டா பெரிய மன்னிப்புன்னு அர்த்தம் :-))

said...

ஆறு அழகுகளும் சும்மா சூப்பரா இருக்கு ;-))


\\எங்க அம்மா இப்பவும் சொல்லுவாங்க. அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தால், உனக்கு நான் மகளாக வேண்டும்ன்னு.\\

என்ன சொல்லறது....உண்மையில் நீங்கள் கொடுத்து வச்சவுங்க தான். வாழ்த்துக்கள் ;-))

\\அவனுகளுக்கு தூது எல்லாம் போய்தான் அந்த மண்ணாங்கட்டியே நமக்கு வரவே இல்லே ... :)\\

ராம் சேம் பிளட்ப்பா ;) கடைசியில் நம்மளை மடையனாக்கியது தான் அவுனுங்க சொஞ்ச ஒரே வேலை.

said...

//அது என்னங்க.. உங்க பின்னூட்டத்தில எல்லாரும் கவிதையா 'பின்றாங்க'! //
தென்றல், ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு கவிஞர் ஙஆஆன்னு முழிச்சிட்டு உட்கார்ந்திருப்பார். சில சமயம் வெளிவருவார். வந்திட்டார் போல....

said...

//ஆமா, அந்த மொக்கையையும் வாசிக்காம விட்ருந்தேன்னா நீங்க என்னை அழைச்சீங்கன்னு எனக்கெப்படித் தெரிஞ்சிருக்கும்? ;-) //

நெத்தியடி!!! அதான.... எப்படி தெரிஞ்சிருக்கும்?

said...

//மண்ணிக்கவும். (மூணு சுழி "ண்ணி" போட்டா பெரிய மன்னிப்புன்னு அர்த்தம் :-)) //
சேதுக்கரசியார் மூணு சுழி போட்டு மன்னிப்பு கேட்பதால், அழகாக அவரை மன்னிப்போம்.

இதனால், யாவருக்கும் தெரிவிப்பது யாதெனில், வரவனையானை அன்புடன் அழகு பேச அழைக்கிறேன்.

said...

வருகைக்கு நன்றி கோபிநாத்!

Anonymous said...

உண்மையில் அழகா தான் இருக்கு :)

said...

நன்றி தூயா! வந்தமைக்கு நன்றி!

said...

Nice post.

said...

ரொம்ப நன்றிங்க பத்மா! நீங்க ஏன் ரொம்ப நாளா பதிவுகளே இடவில்லை?

said...

http://kuttapusky.blogspot.com/2007/04/blog-post_20.html


ஒரு வழியாய் எழுதி ஒப்பேத்திட்டேனாக்கும்

said...

வரவனையான்,
வர்றேன்... வர்றேன்... நான் சொன்னதுக்கு மதிப்பு கொடுத்து எழுதியதற்கு!